நவீன பள்ளிக்கல்வித் திட்டம் உருவாக்கிய இந்திய இளைஞருக்கு ஐ.நாவின் சிறப்பு விருது
நியூயார்க்: நவீன பள்ளிக்கல்வி திட்டம் உருவாக்கியதற்காக ஐ.நா.வின் சிறப்பு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா என்ற இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலக அளவில் தொழில் நுட்ப துறைகளில் சிறந்த திட்டங்களை உருவாக்கும் இளைஞர்களில் 10 பேரை சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன்(ஐ.டி.யூ.) தேர்வு செய்கிறது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஐ.நா. சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்த விருதுக்கான இந்தாண்டுப் போட்டியில் 88 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 18 வயது முதல் 26 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இந்த விருதுக்குத் தகுதியானவர்கள்.
இந்நிலையில், நேற்று இந்தாண்டு விருதுக்கு தேர்வு பெற்ற 10 பேரின் பெயர் விவரத்தை ஐ.டி.யூ. அமைப்பின் பொதுச்செயலாளர் ஹாமாடோவின் தோரே அறிவித்தார். அதில் இந்தியரான வருண் அரோரா பெயரும் இடம் பெற்றிருந்தது.
தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கிய காரணத்திற்காக அவர் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
மேலும், வருணைத் தவிர வியட்நாம், டிரினிடாட் ஆகிய நாடுகளை சேர்ந்த இளைஞர்களும் இந்த விருதுக்குத் தேர்வாகி உள்ளார்கள். வெற்றி பெற்ற இந்த 10 சாதனையாளர்களுக்கும் வரும் நவம்பர் மாதம் பாங்காக்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications