தைவான் கீலுங் நகரில் இந்தியர்கள் விமரிசையாக கொண்டாடிய 'பொங்கல் பண்டிகை'
கீலூங்: தைவான் நாட்டின் கீலூங் நகரில் இந்தியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை சூரியனை வணங்கி, பொங்கல் உண்டு வெகுசிறப்பாக கொண்டாடிமகிழ்ந்தனர்.
கீலூங் நகரில் அமைந்துள்ள தேசிய தைவான் கடல்சார் பல்கலைக்கழகத்தில் (National Taiwan Ocean University) இருக்கும் இந்தியர்கள் அனைவரும் இணைந்து முதல் முறையாக "NTOU பொங்கல் 2021" என்ற பெயரில் பொங்கல் விழாவை மிக விமர்சையாக கொண்டாடினர்.
இந்நிகழ்விற்கு இந்திய தைபே அசோசியேசனின் துணை இயக்குனர் பிஜய் தாஸ், தேசிய தைவான் கடல்சார் பல்கலைக் கழகத்தின் துணைத் தலைவர் முனைவர். மிங்-கன் லீ, தேசிய தைவான் கடல்சார் பல்கலைக் கழகத்தின் சர்வதேச விவகாரங்களின் டீன் முனைவர். ஐ. ஷுவங் சென் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
தேசிய தைவான் கடல்சார் பல்கலைக் கழகத்தின் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஆராய்ச்சி மாணவர் சண்டீபன், விருந்தினர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தமிழ் உணர்வாளர் முனைவர். பினேஷ் உன்னி கிருஷ்ணன், தமிழர்களின் பண்பாடு மற்றும் பொங்கல் பற்றிய சிறப்புகளை எடுத்துரைத்து முனைவர். அனிஷா ஆனந்த் உடன் இணைந்து நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் தேசிய சிங்ஹுவா பல்கலை கழகத்தின் (National Tsing Hua University) ஆராய்ச்சி மாணவி சினேகா சுந்தரனின் பரத நாட்டியத்துடன் பல ஆடல் மற்றும் பாடல் கலை நிகழ்வுகள் என்று பல்சுவை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பேபி அக்னிஷிகா பினேஷின் நடனமும் பாடலும் அமைந்தது. இந்திய மற்றும் தைவான் நடனக் குழுவினரின் ஆடல் மற்றும் பாடல் என்று இப் பொங்கல் விழா வெகு உற்சாகமாக நடைபெற்றது. முனைவர் ஆதிரா ஜான்சன் விழா நிறைவில் நன்றி கூறினார்.
அதன் பின்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. நாட்டுப் பண்னுடன் விழா நிறைவுற்றது.
இந் நிகழ்ச்சியில் தைவானில் வாழும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த விழா குழுவினரை தைவான் வாழ் இந்தியர்கள் வெகுவாகப் பாராட்டினர்.