மோப்பம் பிடித்த ‛மொசாத்'.. அயதுல்லா அலி காமேனியை இஸ்ரேல் - அமெரிக்கா கொன்றது எப்படி? ஷாக் தகவல்
டெஹ்ரான்: கடந்த ஆண்டை போல் மீண்டும் இஸ்ரேல், அமெரிக்கா சேர்ந்து ஈரானை தாக்கி வருகின்றன. மிகப்பெரிய போர் வெடித்துள்ளது. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உள்பட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டது எப்படி? இரவு நேரத்துக்கு பதில் பகல் நேரத்திலேயே இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தியது எப்படி? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடாது என்று சொல்லி, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தியது. அது போராக மாறியது. 12 நாள் நடந்த போர் முடிவுக்கு வந்தது. அதன்பிறகும் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரானை, டிரம்ப் அழைத்தார்.

3 கட்ட பேச்சுவார்த்தை அமெரிக்கா - ஈரான் இடையே நடந்தும் பலனில்லை. இதனால் கோபமான இஸ்ரேல், அமெரிக்கா நேற்று போரை தொடங்கியது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்பட 100 இடங்களை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
காமேனியின் மாளிகை
ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனியின் அலுவலக இல்ல மாளிகையின் மீது இஸ்ரேலும். அமெரிக்காவும் சேர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. டெஹ்ரானின் மத்திய பகுதியில் இந்த மாளிகை அமைந்துள்ளது. இது ஈரானில் மிகவும் புனிதமான இடமாக பார்க்கப்படுகிறது.
இந்த மாளிகைக்கு Beit-e Rahbari என்று பெயர். ஈரானின் அதிகாரப்பூர்வ மொழியான பெர்சிய மொழியில் ‛தலைமைத்துவத்தின் வீடு' என்று அர்த்தம். இங்கிருந்து தான் அயதுல்லா அலி காமேனி 1989 முதல் வசித்து வருகிறார்.
தரைமட்டமான மாளிகை
அதிகாரிகளின் முக்கிய ஆலோசனை கூட்டம், மக்களுக்கு அவர் உரையாற்றும் நிகழ்வு, மத வழிபாடுகள் இங்கு தான் நடைபெறும். இந்நிலையில் தான் இஸ்ரேலும், அமெரிக்காவும் நேற்று இந்த இடத்தை குறிவைத்து தாக்கின. இதில் அயதுல்லா அலி காமேனியின் மாளிகை தரைமட்டமானது.
இறந்தவர்களின் லிஸ்ட்
இந்த தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி, உயர்மட்ட தளபதிகளான அலி ஷம்கானி (முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்) மற்றும் முகமது பக்கூபூர் (ஐஆர்ஜிசி எனும் ஈரான் புரட்சிபடை தளபதி) ஆகியோரும் கொல்லப்பட்டனர். மேலும் அயதுல்லா அலி காமேனியின் மகள், மருமகன், பேத்தி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
பகல் தாக்குதல் ஏன்?
இந்நிலையில் தான் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த நேற்றைய தினத்தை தேர்வு செய்தது ஏன்? இரவு நேரத்துக்கு பதில் பகல் வேளையிலேயே கொடூர தாக்குதல் நடத்தியது ஏன்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரானை தாக்க தொடர்ந்து திட்டமிட்டு வந்தது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்கமாட்டோம் என டிரம்பிடம் ஒப்பந்தம் செய்வதில் இழுத்தடித்து வந்ததால் அமெரிக்காவும், இஸ்ரேலும் கடும் கோபமடைந்தது. இதையடுத்து தான் நேற்று இருநாடுகளும் சேர்ந்து ஈரானை தாக்கியது. இதுபற்றி அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது:
சுரங்க பதுங்கல்
அமெரிக்கா, இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என்பதை ஈரான் உணர்ந்து இருந்தது. இதனால் ஈரான் தொடர்ந்து ஹைஅலர்ட்டில் இருந்தது. மேலும் சுரங்கத்துக்குள் பதுங்கி இருந்த அயதுல்லா அலி கமேனி உஷாராக இருந்தார். தாக்குதல் நடத்தினால் உடனடியாக சுரங்கத்துக்குள் பதுங்க வாய்ப்பு இருந்தது. இதனால் சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தோம்.
ஆலோசனை கூட்டம்
இதற்கிடையே தான் அயதுல்லா அலி காமேனி தனது உயர்மட்ட ஆலோசகர்கள், அதிகாரிகளுடன் நேற்று மாலையில் ஆலோசனை நடத்துவதாக இருந்தது. இதனை இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாத் உறுதி செய்தது. ஆனால் திடீரென்று அந்த ஆலோசனை நேற்று காலை நேரத்துக்கு மாற்றப்பட்டது.
இதுவும் இஸ்ரேல் உளவுத்துறை வழியாக அறிந்தோம் இதையடுத்து உடனடியாக தாக்குதலை தொடங்க திட்டமிட்டோம். மாலையில் நடத்த வேண்டிய தாக்குதலை காலை நேரத்துக்கு மாற்றினோம். காமேனியின் அலுவலக இல்லத்தை தாக்க வேண்டும் என இலக்கு வைத்தோம். அது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
அமெரிக்கா – இஸ்ரேல்
அதாவது இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இஸ்ரேல் உளவுத்துறையான ‛மொசாத்' தான். இந்த உளவுத்துறையை சேர்ந்த சிலர் மாறுவேடத்தில் அயதுல்லா அலி காமேனியின் நடவடிக்கையை கடந்த சில மாதங்களாக கண்காணித்து வந்தனர்.
அவரது மாளிகையின் ஒவ்வொரு இடம் பற்றியும், அங்கு இருக்கும் பாதுகாப்பு வசதிகள் பற்றியும் இன்ச் பை இன்ச் ஆக தகவல்களை சேகரித்தனர். இதுதொடர்பாக அமெரிக்காவின் சிஐஏ உளவுத்துறையிடம் தொடர்ந்து பகிர்ந்து வந்தனர்.
அயதுல்லா அலி காமேனி உள்ளபட உயர் தலைவர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் "Operation Epic Fury" என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள், அமெரிக்க உளவுத்துறை மற்றும் லாஜிஸ்டிக்கல் வழிக்காட்டுதலின் பேரில் லாங்க் ரேஞ்ச் ஏவுகணையில் வெடிப்பொருட்களை நிரப்பி மாளிகையில் வீசியது. இதில் அயதுல்லா அலி காமேனி உள்பட அங்கிருந்தவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications