ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் அழிக்கும் வரை ஈரான் வேடிக்கை பார்க்கப் போகிறதா? கொந்தளிக்கும் ஈரானியர்கள்!
டெஹ்ரான்: லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழு மீதான தாக்குதலில் அதன் தலைவர் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டுவிட்டார் என்கிறது இஸ்ரேல். ஆனால் இதுவரை நஸ்ரல்லா படுகொலை குறித்து ஹிஸ்புல்லா, லெபனான், ஈரான் தரப்பில் இருந்து எந்த ஒரு உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை. அதேநேரத்தில் ஹிஸ்புல்லா மீதான தொடர் தாக்குதல், நஸ்ரல்லா படுகொலை ஆகியவற்றுக்கும் பின்னரும் ஈரான் அமைதி காப்பது ஏன்? என அந்நாட்டின் பழமைவாதிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் மூர்க்கமான தாக்குதலில் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லெபனானில் இருந்து ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினரை இலக்கு வைத்தே இஸ்ரேல் இந்த ருத்ர தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது.

இஸ்ரேலின் இந்த கொடூரத் தாக்குதலுக்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளின் பல நகரங்களில் பொதுமக்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரான் இந்த விவகாரத்தில் மிக மிக அமைதியாக இருப்பது ஏன்? என்கிற கேள்விகளுடன் ஈரானில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இஸ்ரேலின் எதிரிகளான ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகிய குழுக்களுக்கான ஆயுதங்களை வழங்கி அரவணைத்து வருகிற நாடுதான் ஈரான். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் ஹமாஸ் இயக்கத்துக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கிய ஆட்டம் இப்போது லெபனானில் ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும் ஈரான் தரப்பில் கனத்த மவுனம் வெளிப்பட்டு வருவது பெரும் கேள்விக்குறியாகவும் எழுந்துள்ளது. பொதுவாக இத்தகைய தருணங்களில் ஈரான் தரப்பு மிக காட்டமான கருத்துகளை வெளியிடும். ஈரான் தலைவர்கள், ஈரான் நாட்டின் புரட்சிப் படைகளின் தளபதிகளின் எச்சரிக்கை கடுமையானதாகவும் இருக்கும். உதாரணமாக, சிரியா தலைநகரில் ஈரான் தூதரகம் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி தந்தது ஈரான். ஆனால் ஈரானில் வைத்தே ஹமாஸ் தலைவர் இஸ்மாயின் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பிறகு கடந்த சில மாதங்களாக ஈரானின் போக்கில் கடும் மாற்றம் வெளிப்பட்டு வருகிறது.
ஈரான் அதிபர் பெசெஷ்கியனோ, தங்களது நாட்டை எப்படியாவது போரில் களமிறக்கியாக வேண்டும் என துடிக்கிறது இஸ்ரேல். ஆனால் நாங்கள் பொறுமையாக கையாள்கிறோம் என்கிறார். ஈரானின் இத்தகைய மிதவாதம் முன்னெப்போதும் இல்லாதது என்பதால்தான் பழமைவாதிகள் பெரும் கொந்தளிப்பை வெளிப்படுத்துகின்றனர். இது ஈரானின் அரசியலில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்படுவதற்கு முந்தைய கனத்த அமைதியாகவும் இருந்துவிடலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications