ஆண்களுடன் சேர்ந்து ஆடியதற்காக 3 பெண்களுக்கு 91 கசையடி.. ஈரான் அரசு நடவடிக்கை
டெக்ரான்: வீடியோ காட்சியில் தோன்றி ஆடியதற்காக ஈரானின் 3 இளம் பெண்கள் உட்பட ஆறுபேருக்கு 91 முறை கசையடி அளிக்கவும், அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கவும் அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பர்ரல் வில்லியம்சின் வீடியோ ஆல்பம் ஒன்றில் பர்தா அணியாத பெண்கள் மூவர் தெருவிலும், வீட்டு மேலும் நின்றபடி ஆடுவது போன்ற காட்சி இருந்தது. ஆறு மாதங்கள் முன்பு வெளியான இந்த வீடியோவை இதுவரை 10 லட்சம் பேர் யூடூப்பில் பார்த்துள்ளனர்.
ஈரான் அரசுக்கு இந்த வீடியோ குறித்த விவரம் கடந்த மே மாதம் தெரியவந்தது. அந்த நாட்டு இஸ்லாமிய சட்டப்படி பிற பாலினத்தவருடன் சேர்ந்து நடனமாடுவதும், பெண்கள் முகத்தில் திரை போட்டு மறைத்துக்கொள்ளாமல் வெளியே முகத்தை காண்பித்ததும் குற்றமாகும்.
எனவே வீடியோவில் காட்சியளித்த மூன்று பெண்கள் உடன் ஆடிய மூன்று ஆண்கள் என மொத்தம் ஆறுபேர் ஈரான் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஐந்து பேருக்கு 6 மாத சிறை தண்டனையும், 91 கசையடியும், ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 91 கசையடியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.
சாட்டையை எடுத்து ரத்தம் வரும் அளவுக்கு அடித்து உதைப்பது கசையடி என்பதால், ஈரான் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உலகளாவிய மனித உரிமை மற்றும் பெண்ணுரிமை ஆர்வலர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வில்லியம்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், உலகிற்கு மகிழ்ச்சியை பரப்ப வேண்டும் என்று நினைத்த அந்த குழந்தைகள் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications