1,700 ஈராக் ராணுவ வீரர்களுக்கு 'மரண தண்டனை' கொடுத்துவிட்டோம்: சதாம் ஆதரவுப் படை அறிவிப்பு
திக்ரீத்: ஈராக் ராணுவத்தின் 1,700 வீரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டோம் என்று சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்துள்ளது.
ஈராக்கில் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்., மொசூல், திக்ரீத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியிருக்கிறது.
கைப்பற்றப்பட்ட நகரங்களில் இருந்து மக்களையும் வெளியேற்றி வருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். பெரும்பாலான நகரங்களில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை அப்படியே கைவிட்டுவிட்டு ஈராக் ராணுவ வீரர்கள் சாதாரண உடையில் தப்பி ஓடிவிட்டனர்.

தற்போது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற நிலையில் பாக்தாத் நோக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வேகம் சற்று குறைந்துள்ளது. அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஏற்கெனவே பெர்சியா வளைகுடா பகுதிக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் தங்களிடம் பிடிபட்ட ஈராக் ராணுவ வீரர்கள் 1700 பேருக்கு மரண தண்டனை விதித்துவிட்டோம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்கிறது ஈராக் அரசு. இது தொடர்பாக அந்நாட்டு அரசு விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications