சிரியாவின் கோபனி நகரில் உக்கிர சண்டை- ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் வீழ்கிறது?
கோபனி: சிரியாவின் எல்லை நகரமான கோபனி நகரை கைப்பற்றுவதற்காக உக்கிர யுத்தத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் வான்படை தாக்குதல்களையும் மீறி கோபனி நகரின் முக்கிய பகுதிகள் இன்று தீவிரவாதிகள் வசமாகி இருக்கிறது.
சிரியா-துருக்கி எல்லையில் உள்ளது கோபனி நகரம். இங்கு குர்து இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த நகரைக் கைப்பற்றுவதற்காக கடந்த மாதம் 16-ந் தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடங்கினர்.

குர்து போராளிகள்
ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக குர்து ஆயுதம் தாங்கிய படையினர் யுத்தம் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளின் வான்படைகளும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

2 லட்சம் பேர் அகதிகள்
இந்த யுத்தத்தால் சுமார் 2 லட்சம் மக்கள் கோபனி நகரை விட்டு வெளியேறி அகதிகளாக சென்றுவிட்டனர். கடந்த சில நாட்களாக இந்த யுத்தம் மேலும் உக்கிரமடைந்துள்ளது.

முன்னேறும் ஐ.எஸ். தீவிரவாதிகள்
கோபனி நகரின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி முன்னேறிச் செல்கின்றனர். அதே நேரத்தில் குர்து போராளிகளுக்கு துருக்கி பகுதியில் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட எந்த ஒரு உதவியும் கிடைக்காமல் தடுக்கப்படுவதால் அவர்களால் நிலைமையை சமாளிக்க இயலவில்லை.

உதவாத வான்வழித் தாக்குதல்கள்
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வான்வழித் தாக்குதல்களை மட்டுமே நடத்துவதால் அது ஐ.எஸ். தீவிரவாதிகளின் முன்னேற்றத்தை பெருமளவு தடுக்கவும் முடியவில்லை. கடந்த சில நாட்களில் மட்டும் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

பின்னடைவு?
கோபனி நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் வீழ்ந்தால் அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் நடவடிக்கைக்கு மிகப் பெரும் பின்னடைவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications