ஐ.எஸ்.ஐ.எஸ். முற்றுகையில் சிக்கிய 45 ஆயிரம் யாஸிதிகள் பாதுகாப்பாக மீட்பு!!
மொசூல்: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய 45 ஆயிரம் யாஸிதி இனத்தவர் அமெரிக்க படைகளின் பெரு முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஈராக்கில் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய சன்னி முஸ்லிம்களின் ஆயுதக் குழுவான ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கத்தினர் கடந்த சில வாரங்களாக சிறுபான்மை இனத்தவர் வசிக்கும் நகரங்க்ளை குறிவைத்து ஆக்கிரமித்து வருகின்றனர். யாஸிதி என்ற சிறுபான்மையினர் நகரான சிஞ்சாரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடியில் சிக்கியது.
இதனால் அந்த நகரைவிட்டு சுமார் 50 ஆயிரம் யாஸிதிகள் தப்பி ஓடினர். சிஞ்சார் மலைக் குன்றுகளை கடந்த குர்திஷ் மாகாண பகுதிக்குள்ளே செல்ல முயற்சித்தனர். ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் அவர்களை நகர முடியாதபடி முற்றுகையிட்டனர்.

ஆயிரக்கணக்கானோர் பட்டினிக்கு பலி
இதனால் பசியும் பட்டினியுமாக வாட்டிய வெயிலில் பிஞ்சு குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் செத்து மடிய... அப்படியே கொத்து கொத்தாக உடல்களை விட்டு தப்பி ஓடி குகைகளில் யாஸிதி இனத்தவர் பதுங்கினர்.

மனிதப் பேரவலம்
சிஞ்சாரில் மிகப் பெரிய மனிதப் பேரவலம் நடக்கப் போகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது. இதன் பின்னர் அப்பகுதியில் தாக்குதல் நடத்த அமெரிக்கா இறங்கி வந்தது.

உலக நாடுகள்..
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகள் செய்ய முன்வந்தன.

10 நாட்களாக தாக்குதல்
கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சிஞ்சார் மலைக் குன்றில் அமெரிக்காவும் குர்திஷ் படைகளும் தாக்குதலை நடத்தின. இதன் பயனாக சிஞ்சார் மலைக்குன்றைவிட்டு 45 ஆயிரம் யாஸிதிகள் பாதுகாப்பாக வெளியேறி இருக்கின்றனர்.

5 ஆயிரம் பேர்தான்
இன்னும் சுமார் 5 ஆயிரம் பேர்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தவரின் முற்றுகையில் இருப்பதாக அமெரிக்கா ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications