மோடி பங்கேற்கும் ஜி20 மாநாடு நடக்கும் தென் துருக்கியில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 போலீசார் காயம்
அன்டல்யா: ஜி20 மாநாடு நடைபெற்று வரும் தென் துருக்கியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் 4 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.
உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள ஜி20 மாநாடு துருக்கியின் தென் பகுதியில் உள்ள அன்டல்யா நகரில் இன்று துவங்கியது. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பாரீஸ் தாக்குதல்களை அடுத்து பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்ட் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
மாநாட்டில் தீவிரவாதம் பற்றி தான் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தென் துருக்கியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் 4 போலீசார் காயம் அடைந்துள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகில் நடக்கவில்லை. இருப்பினும் மாநாடு நடக்கும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாரீஸ் தாக்குதலால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு துருக்கியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாரீஸ் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.