ஈராக்கில் 45 பேரை உயிருடன் எரித்துக் கொன்ற மாபாதக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 45 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கில் உள்ள அய்ன் அல் ஆசாத் விமானப்படைதளம் அருகே உள்ள அல் பாக்தாதி நகரை கடந்த வாரம் கைப்பற்றினர். இந்நிலையில் தீவிரவாதிகள் அந்நகரில் வைத்து 45 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் யார், எதற்காக கொலை செய்யப்பட்டனர் என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை.
கொல்லப்பட்டவர்களில் சிலர் ஈராக் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் என்று கர்னல் காசிம் அல் உபைதி தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களின் குடும்பங்கள் தங்கியிருந்த வீடுகளை தீவிரவாதிகள் தாக்கியதாக உபைதி மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை எகிப்தைச் சேர்ந்த 21 கிறிஸ்தவர்களின் தலையை துண்டித்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள். அதற்கும் முன்பு தாங்கள் பிணையக் கைதியாக பிடித்து வைத்திருந்த ஜோர்டானைச் சேர்ந்த விமானியை உயிருடன் எரித்துக் கொன்று அந்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
கடந்த 2 மாதங்களில் ஈராக்கில் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள முதல் நகரம் அல் பாக்தாதி தான் என்று கூறப்படுகிறது. இந்நகரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அய்ன் அல் ஆசாத் விமானப்படை தளத்தில் ஈராக் ராணுவத்தின் 7வது பிரிவினருக்கு 320 அமெரிக்க வீரர்கள் பயிற்சிச் அளித்து வருகின்றனர்.
அந்த விமானப்படை தளம் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications