துனிசியாவில் 23 பேரை கொன்றது தூவானமே, மழை இனி தான்: ஐஎஸ்ஐஎஸ்
துனிஸ்: துனிசியாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
துனிசியாவில் உள்ள தேசிய பார்டோ அருங்காட்சியத்திற்குள் 2 துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் புதன்கிழமை புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த 23 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். அந்த 2 தீவிரவாதிகளையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அருங்காட்சியகம் உள்ள துனிஸ் நகரில் தான் ஜனநாயகத்தை எதிர்பார்த்து மக்கள் துவங்கிய அரபு வசந்தம் போராட்டங்கள் துவங்கின. 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி துவங்கிய அரபு வசந்தம் போராட்டம் வரிசையாக பிற அரபு நாடுகளுக்கும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
அருங்காட்சியகத்தில் நடந்த சம்பவத்தில் இறந்தவர்களில் பலர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். அதில் 12 பேர் எம்.எஸ்.சி. ஸ்பெளென்டிடா சொகுசு கப்பலிலும், 5 பேர் காஸ்டா பாசினோஸா சொகுசு கப்பலிலும் வந்தவர்கள்.
இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இது தூவானம் தான், மழை இனிமேல் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியக தாத்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யாசீன் லாபிதி மற்றும் ஹாத்தீம் என்று தெரிய வந்துள்ளது. அதில் யாசின் உளவுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications