ஈரானை முடித்த கையோடு லெபனான் பக்கம் திரும்பிய இஸ்ரேல்.. வரிசையாக தாக்கிய ராக்கெட்கள்! 31 பேர் பலி
டெல் அவிவ்: மத்திய கிழக்கில் இப்போது ஒரு மாபெரும் பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது. ஒரு பக்கம் இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல்களைத் தொடரும் சூழலில், இப்போது லெபனான் நாட்டிலும் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் நாட்டில் நடந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் அணு ஆயுதங்கள் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே கடைசி வரை உடன்பாடு எட்டப்படவே இல்லை. இதனால் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை ஈரானைச் சுற்றிலும் குவித்து வந்தது. எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்றே சொல்லப்பட்டது.

தாக்குதல்
அதன்படியே கடந்த சனிக்கிழமை ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா- இஸ்ரேல் ஆரம்பித்தது. ஈரானின் முக்கியமான பகுதிகளைக் குறிவைத்து இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தின. இதில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும், ஈரானும் இதில் கடுமையான பதிலடியைக் கொடுத்து வருகிறது. அங்குள்ள அமெரிக்க முகாம்களைக் குறிவைத்து ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அங்கு மிக மோசமான சூழல் நிலவுகிறது.
பதிலடி
இதற்கிடையே ஈரானைத் தாண்டியும் அங்குப் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இஸ்ரேல் படைகள் இப்போது லெபனான் நாட்டின் மீதும் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை நடத்தியுள்ளது. கமேனி மரணத்திற்குப் பதிலடியாக இஸ்ரேலைக் குறிவைத்து ராக்கெட் மற்றும் ட்ரோன்களை ஹிஸ்புல்லா அமைப்பு ஏவிய நிலையில், அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் தொடர்ச்சியான இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெய்ரூட்டில் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டதாகச் சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் ஈரானைத் தாண்டியும் மத்திய கிழக்கு முழுக்கவே ஒரு போர் பதற்றம் உருவாகியுள்ளது.
31 பேர் உயிரிழப்பு
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர்.. 149 பேர் காயமடைந்தனர். ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உயிரிழப்பு குறித்த தகவல்களை லெபனான் அரசு பகிர்ந்துள்ளது. பெய்ரூத்தின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளிலும், தெற்கு லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதாக அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா
ஈரானிய உயர் தலைவர் அலி கமேனியின் படுகொலைக்குப் பதிலடியாக, ஈரான் ஆதரவுப் பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியது. இந்தத் தாக்குதல்களுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்றது. அயத்துல்லா கமேனியின் தூய மரணத்திற்குப் பழிவாங்கும் விதமாகவும், லெபனானையும் அதன் மக்களையும் பாதுகாக்கும் விதமாகவும் இந்த தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா கூறியது. ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதலுக்குப் பதிலடியாகவே இஸ்ரேல் லெபானான் மீது தாக்குதலை நடத்தியது.
மீண்டும் வெடித்த மோதல்
ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் போரின் போதும், ஹிஸ்புல்லா இதேபோலத் தான் உள்ளே வந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுக்கவே சுமார் ஓராண்டுக்குப் போர் தொடர்ந்தது. கடந்தாண்டு நவம்பரில் தான் இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் சில மாதங்களில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications