ஈரானை மொத்தமாக கைவிடும் நட்பு நாடுகள்? தனிமரமான கமேனி.. யாருமே கண்டுக்கல.. என்ன தான் நடக்கிறது?
தெஹ்ரான்: ஒரு வாரமாகவே இஸ்ரேல் மற்றும் ஈரான் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் தற்போது வரை இஸ்ரேலின் கை தான் ஓங்கி இருப்பது போலத் தெரிகிறது. இந்த மோதலில் ஈரான் நட்பு நாடுகளும் அமைப்புகளும் யாருமே உள்ளே வரவில்லை. ஈரானுக்கு இதுவே பின்னடைவாகவே மாறியுள்ளது.
இஸ்ரேல் ஈரான் மோதல் ஒரு வாரமாகத் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலில் ஈரானிற்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகள், குறிப்பாக ஈரான் ஆதரவு பெற்ற ஆயுத குழுக்கள் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஈரானின் நட்பு நாடுகளும் குழுக்களும் உண்மையில் யார்.. அவர்கள் ஈரானை கைவிடுவது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஹிஸ்புல்லா
லெபனானைச் சேர்ந்த ஷியா துணை ராணுவக் குழுவான ஹிஸ்புல்லா ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வந்தது. ஆனால், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு, ஹிஸ்புல்லா பெரிய பதிலடி எதுவும் கொடுக்கவில்லை. கடந்தாண்டு இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுத்தவர்கள் இந்தாண்டு அமைதியாக இருக்கிறார்கள். இதற்கு காரணமும் இஸ்ரேல் தான்.. 2023 முதல் இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அதன் தலைமையை இழந்து தடுமாறி வருகிறது.
ஹிஸ்புல்லாவின் நீண்டகாலத் தலைவரான ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலின் துல்லியமான தாக்குதலில் கொல்லப்பட்டது தான் அவர்களுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அதன் தற்போதைய தலைவர் நயிம் காஸ்ஸெம் ஈரானுக்கு ஆதரவு அளிப்பதைப் போலத் தெரியவில்லை. அவர் லெபனான் விவகாரத்தை மட்டுமே கவனிக்க நினைக்கிறார். இதன் காரணமாகவே அவரது அலுவலகத்தில் கமேனியின் போட்டோ கூட இல்லை என்கிறது வாஷிங்டன் போஸ்ட். சிரியாவில் பஷர் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களும் குறைந்துவிட்டன.
ஹமாஸ்
ஹமாஸை பற்றிச் சொல்லவே வேண்டாம். 2023 அக்டோபர் தாக்குதலுக்குப் பிறகு காசாவில் உள்ள ஹமாஸ் படைகள் மீது இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை நடத்தியது. ஹமாஸின் முக்கிய தலைவர்களான இஸ்மாயில் ஹனியே மற்றும் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். ஹமாஸ் நம்பியிருந்த சுரங்கங்கள், ராக்கெட் தொழிற்சாலைகளை இஸ்ரேல் காலி செய்துவிட்டது. இதனால் ஹமாஸால் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்க முடியவில்லை.
ஈராக்
ஈராக்கில் நீண்ட காலமாக அமெரிக்கப் படைகளுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஷியா போராளிகள் குடைச்சல் கொடுத்து வந்தனர். இது அங்கு ஈரான் செல்வாக்கை அதிகரித்தது.. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. கடந்த ஜனவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேல் முதலில் தாக்குதல் நடத்திய போதே ஷியா போராளிகள் கண்டனங்களை மட்டும் தெரிவித்தனர். ஈராக்கின் தற்போதைய பிரதமர் முகமது அல்-சுதானிக்கு அமெரிக்காவுடன் நல்ல உறவு இருக்கிறது.. அவர் போராளி குழுக்களை இந்த மோதலில் இருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தியதால் அவர்களும் அமைதி காக்கிறார்கள்.
ஹவுதி
ஏமனின் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் கடந்த சில காலமாகவே ஈரானுக்கு முழு ஆதரவை வெளிப்படுத்தி வந்தனர். இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவது, அமெரிக்கா மீதான வெறுப்பு அறிக்கைகள் என பரபரத்தன. ஆனால், அவர்களும் இப்போது அமைதியாகிவிட்டனர். அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் ஹவுதி படைகளின் ஏவுகணை மையங்கள் அழிக்கப்பட்டன. இதனால் இப்போது அவர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ஹவுதி தலைமை ஈரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலும், அவர்கள் அமைதியாக இருக்கவே முடிவு செய்துள்ளனர்.
ரஷ்யா
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியே பார்த்தால் ரஷ்யா, சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு எப்போது்ம ஆதரவு அளிக்கும். இதில் ஈரானுக்கு ரஷ்யா ஆதரவாக இருந்தாலும், இஸ்ரேல்-ஈரான் மோதலில் கவனமாகச் செயல்படுகிறது. இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்தாலும் ரஷ்யா இதில் பெரிதாகத் தலையிடவில்லை.
சீனா
சீனாவைப் பொறுத்தவரை அவர்கள் அமெரிக்கத் தடை செய்த ஈரான் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்குகிறது. மேலும், ஈரானுடன் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரித்துள்ளது. 2023இல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஈரானை இணைத்தது. ஆனால், சீனா தன்னை வல்லரசாக உயர்த்திக் கொள்ள விரும்புகிறது. இதனால் மோதலில் ஈடுபடாமல் தன்னை ஒரு மத்தியஸ்தராக காட்டிக்கொள்ளவே விரும்புகிறது. வடகொரியாவும் இந்த விவகாரத்தில் இப்போது வரை சைலண்டாகவே இருந்து வருகிறது.
அதாவது மொத்தமாகப் பார்த்தால் ஈரானின் நட்பு நாடுகள் அந்த நாட்டிற்கு ஆதரவாகக் களத்தில் இறங்கத் தயங்குகின்றன. இதனால் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானின் பலம் சற்று குறைந்து காணப்படுகிறது. இது இஸ்ரேலுக்குப் பெரிய அட்வான்டேஜாகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications