ஈரான் தலைவர் கமேனியை கொல்வது மட்டுமே ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் சொன்ன வார்த்தை! உச்சகட்ட பதற்றம்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுமே மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே ஈரான் நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமெனியை கொல்வது மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் இப்போது மீண்டும் பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. ஈரானைக் குறிவைத்துக் கடந்த வாரம் இஸ்ரேல் முதலில் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே நிலைமை மோசமாகி வருகிறது. இது மத்திய கிழக்கு மட்டுமின்றி சர்வதேச பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உலக நாடுகள் இந்த மோதலை உற்றுக் கவனித்து வருகின்றன.

நெதன்யாகு
இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியாயப்படுத்தியுள்ளார். மேலும், ஈரான் நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொல்வது மட்டுமே இரு நாடுகளுக்கிடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணு ஆயுத முயற்சி உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதே இஸ்ரேலின் நோக்கமே தவிர மோதலை அதிகரிப்பது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நெதன்யாகுவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
முதல்முறை இல்லை
கமேனியை கொல்வது குறித்து இஸ்ரேல் தரப்பு பேசுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே நேற்றைய தினம் கமேனியை கொல்லும் திட்டம் கூட லிமிட்டில் இல்லாமல் போகவில்லை என்பது போல இஸ்ரேல் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். ஆனால், இந்தத் தகவல் வெளியான உடனேயே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த பிளானை நிராகரித்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்த திட்டம் மோதலை தீவிரப்படுத்தக்கூடும் என்று டிரம்ப் நினைப்பதாகக் கூறப்பட்டது.
டிரம்ப் முடிவு என்ன
இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஈரான் இதுவரை எந்த அமெரிக்கரையும் கொல்லவில்லை. அதுபோல எந்தவொரு தாக்குதலும் நடைபெறாத வரை.. அரசியல் தலைமையைக் குறிவைப்பது குறித்துப் பேசக்கூட போவதில்லை" என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் மீண்டும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவே இதுபோன்ற கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
நெதன்யாகு சொல்வது என்ன
கமேனியை கொல்லும் திட்டம் எதாவது இஸ்ரேலிடம் இருக்கிறதா என்ற எழுப்பியபோது, நெதன்யாகு அதை மறுக்கவில்லை. அதற்குப் பதிலாக, "இது மோதலை அதிகரிக்காது, மோதலை முடிவுக்குத் தான் கொண்டுவரும்" என்று பதிலளித்தார். மேலும், இந்த பிராந்தியத்தில் ஈரான் நீண்ட காலமாக ஒரு நிலையற்ற சக்தியாக இருந்து வருகிறது என்றும் விமர்சித்தார்.
நெதன்யாகு மேலும் கூறுகையில், "மத்திய கிழக்கில் உள்ள அனைவரையும் ஈரான் பயமுறுத்தி வருகிறது.. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வயல்களைக் குண்டு வீசி தாக்கியது. மேலும், பயங்கரவாதத்தையும், அரசைக் கவிழ்ப்பது மற்றும் நாச வேலைகளை என எல்லா இடங்களிலும் மோசமான செயல்களைச் செய்து வருகிறது. இவர்களால் தான் இந்த பிராந்தியத்தில் அரை நூற்றாண்டு காலமாக மோதல்கள் தொடர்ந்து வருகிறது" என்றார்
இஸ்ரேல் ஈரான் பதற்றம்
இஸ்ரேல் ஈரான் இடையே ஏற்கனவே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் ஈரானின் உயர்மட்ட தலைவரான கமேனியை கொல்வது குறித்து வெளிப்படையாகவே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியிருக்கிறார். இது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications