ஈரானுடனான அணுசக்தி பேச்சு மும்முரம்!! யு.எஸ்.க்கு எதிராக இஸ்ரேல் போர்க்கொடி!!
மொண்ட்டிரியுக்ஸ்: அணுசக்தி உடன்பாடு குறித்து ஈரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் இப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார். இதனால் இஸ்ரேல்- அமெரிக்க உறவில் கடுமையான விரிசல் உருவாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி உடன்படிக்கை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் ஈரானுடன் ஒரு உடன்படிக்கை எட்டப்பட வேண்டும் என்பது இலக்கு.
இதனைத் தொடர்ந்து ஜூன் மாத இறுதிக்குள் ஈரானின் அணு ஆராய்ச்சி திட்டங்கள் குறித்த அனைத்து விதமான தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் மொண்ட்டிரியுக்ஸில் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவத் ஸரிஃபும் ஆகியோர் இப்புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மிகக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஈரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அணுசக்தி உடன்படிக்கை செய்து கொண்டால் ஈரான் அணுகுண்டுகளை தயாரிக்க அமெரிக்காவே உதவுவதாகிவிடும்; இது இஸ்ரேலுக்கு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய நெதன்யாகு, ஈரானுடனான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஒப்பந்தத்துக்கு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தார். ஆனால் இஸ்ரேல் பிரதமரின் இந்த எதிர்ப்பு தற்காலிகமான ஒரு தடையாகத்தான் இருக்கும் என்றும் இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுவிடாது என்றும் அமெரிக்கா அதிபர் ஒபாமா நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.
அதே நேரத்தில் இஸ்ரேலில் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட இருப்பதால் தமக்கு செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் நெதன்யாகு இத்தகைய கருத்துகளை வெளிப்படுத்தி வருவதாக அவரது எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டியும் வருகின்றனர்.