காசாவில் விரைவில் புதிய ஆட்சி.. தாக்குதல் மேலும் தீவிரமடையும்! எச்சரிக்கும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை
காசா: காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படையினரை அழித்துவிட்டு அங்கு, புதிய பாதுகாப்பு ஆட்சியை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 13 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குததில் தங்கள் நாட்டை சேர்ந்த சில பிணை கைதிகளை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அதிகமான பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது. மட்டுமல்லாது காசாவையும், ஹமாஸ் படையையும் முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேலிய ராணுவம் உறுதியேற்றுள்ளதால், இந்த தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது வரை காசாவில் 1,500 குழந்தைகள் உட்பட 3,785 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 12,400 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அளிக்க போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தற்போது காசா வசம் கிடையாது. குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால், சுமார் 4.25 லட்சம் மக்களை ஐநா, பள்ளிக்கூடங்களில் தங்க வைத்திருகிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் தவிர்த்து 15 மருத்துவர்களும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 ஆம்புலன்ஸ்கள், 10 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் 14ம் நாளாக நேற்று அதிகாலையில் காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. காசாவின் கிரீக் ஆர்த்தடாக்ஸ் தேவாலய வளாகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பெண்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஓரணயில் திரண்டுள்ளன. இப்படி இருக்கையில் இஸ்ரேலின் நோக்கும் குறித்து அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் விளக்கியுள்ளார்.
இஸ்ரேலின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கேலண்ட், "காசாவுக்கு எதிராக நாங்கள் மூன்று கட்ட திட்டங்களை வைத்திருக்கிறோம். முதல்கட்டம் வான்வழி தாக்குதல். கடந்த 7ம் தேதி தொடங்கி நேற்றுவரை இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. அதேபோல நாங்கள் விரைவில் தரை வழியாகவும் ஊடுருவுவோம். இதனையடுத்து ஹமாஸ் படையினரின் பதுங்கு குழிகள் ஒவ்வொன்றாக அழிக்கப்படும். இறுதியாக காசாவில் புதிய பாதுகாப்பான ஆட்சியை உருவாக்கப்படும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications