பணய கைதிகளை விடுவித்தாலும்.. போரை நிறுத்த மாட்டோம்! இஸ்ரேலால் அச்சத்தில் ஹமாஸ்.. தொடரும் யுத்தம்
டெல் அவிவ்: கடந்த நான்கு மாதங்களாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், போரை நிறுத்த பலகட்ட பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஹமாஸ் படையை முழுமையாக அழிக்கும் வரை போர் நிறுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
போர்கள் என்பது இந்த மண்ணில் கூடவே கூடாது என்பதுதான் நம் அனைவரின் நிலைப்பாடும். ஆனால் தவிர்க்க முடியாமல் அது இன்னமும் மனித சமூகத்தை பின்தொடர்ந்துதான் வந்துக்கொண்டிருக்கிறது. இப்படியாக நீண்ட காலமாக நடைபெற்று வரும் போர்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் முக்கியமானது. இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனியிடமிருந்து தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி பாலஸ்தீனம் வந்தனர். அவர்களை பாலஸ்தீன மக்கள் அன்போடு வரவேற்றனர்.

ஆனால் பிரிட்டனும், அமெரிக்காவும் யூதர்களை பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்குவதாக வாக்களித்தனர். இப்படி உருவானதுதான் இஸ்ரேல். தங்க நிலம் கொடுத்த நாட்டையே இரண்டு துண்டாக உடைத்து அதில் இஸ்ரேலை யூதர்கள் உருவாக்கினார்கள். நாளடைவில் இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைய தொடங்கியது. இதற்கு எதிராக பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் உருவாக தொடங்கின.
பாலஸ்தீன விடுதலைக்கு இந்த அமைப்புகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை முன்னெடுக்க, இவர்களை அடக்குகிறோம் என இஸ்ரேல் போரில் குதித்தது. இதன் விளைவாக அவ்வப்போது பாலஸ்தீனம் மீது குண்டுகளை பாய்ந்தன. எங்கு பார்த்தாலும் அழுகை குரலும், வெடி குண்டுகளால் சிதறுண்ட உடல்களும் பாலஸ்தீனத்தில் மிகவும் இயல்பானதாக மாறியது. இதையெல்லாம் பார்த்த உலக நாடுகள் பஞ்சாயத்து பேசி, இஸ்ரேலுக்கு கடிவாளமிட்டது.
ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதியன்று, யாரும் எதிர்பார்க்காத வகையில் முதன் முறையாக இஸ்ரேல் மீது, பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் ராக்கெட்களை வீசி தாக்குதலை தொடங்கி வைத்தது. இதற்கு எதிராக இஸ்ரேல் மிகப்பெரிய பதில் தாக்குதலை தொடுத்து வருகிறது. கடந்த 150 நாட்களாக நடைபெற்று வரும் இந்த பதில் தாக்குதலில் சுமார் 27 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்படியெனில் நாளொன்றுக்கு சராசரியாக 180 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
ஐநா பொதுச்சபையில் போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட இஸ்ரேல் இந்த போரிலிருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை. தங்கள் வசம் இருக்கும் பணய கைதிகளை விடுவிப்பதாகவும், ஆனால் அதற்கு பதிலாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் ஹமாஸ் முன்வந்திருந்தது. இந்த கோரிக்கையை இஸ்ரேல் ஏற்க மறுப்பு தெரிவித்திருக்கிறது. முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
தங்கள் வசம் இருக்கும் அனைத்து பயண கைதிகளையும் விடுவிப்பதாகவும், அதற்கு பதில் பாலஸ்தீனத்தின் மூத்த போராளிகள் நூறுபேரை விடுவிக்க வேண்டும் என்றும் ஹமாஸ் கூறியிருந்தது. மேலும், காசா முழுவதும் உள்ள மருத்துவமனைகளை புனரமைக்க வேண்டும், இஸ்ரேலிய துருப்புக்களை திரும்பப் பெறுவதுடன், முதல் 45 நாட்களில் மக்களுக்கு தங்குமிட முகாம்களை அமைக்க வேண்டும் என்றும் ஹமாஸ் நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால் இதை இஸ்ரேல் ஏற்கவில்லை. எனவே போர் நீடிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications