ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.. கடும் குளிரிலும் குடும்பத்தோடு வீதியில் திரண்ட அமெரிக்க தமிழர்கள்
வாஷிங்டன்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அமெரிக்காவில் தமிழர்கள் குடும்பத்தோடு வந்து போராட்டத்தில் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பென்டோன்வில் நகரத்தின் மைய பகுதியில் திரண்ட சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தி நின்றனர்.
கடும் குளிருக்கு மத்தியிலும், தமிழர்களின் பாரம்பரியத்தை காண்பிப்பதற்காக வேஷ்டியை அணிந்து வந்த தமிழ் இளைஞர்களையும் அங்கு பார்க்க முடிந்தது.

குடும்பத்தோடு
குளிரையும் பொருட்படுத்தாது, தலையை சேர்த்து முண்டாசு போல மஃப்ளர்களை வைத்து கட்டிக்கொண்டும், குல்லாக்களை அணிந்து கொண்டும், ஆண்களும், பெண்களும், தங்கள் சிறு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு இந்த பேரணிக்கு வருகை தந்திருந்தது சிறப்பு.

பாரம்பரியம்
தமிழர்களின் பாரம்பரியத்தை அழிய விடக்கூடாது என்பதற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாது குடும்பத்தோடு வீதிக்கு இறங்கியுள்ளதாகவும், தமிழகத்திலுள்ள தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு அமெரிக்காவிலும் ஆதரவு உள்ளது என்பதை காண்பிக்க வந்துள்ளதாகவும் அவர்கள் பெருமிதத்தோடு தெரிவித்தனர்.

காளைகளை காப்பாற்றுங்கள்
பேரணியில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும், தமிழர் கலாசாரம், காளை மாடுகளை அழிவிலிருந்து காப்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஜல்லிக்கட்டு அவசியம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஜல்லிக்கட்டு ஏன்?
காளைகளின் திறமையை ஜல்லிக்கட்டு வைத்துதான் கண்டுபிடிப்பதாகவும், அப்படி திறமையான, வலிமையான காளைகள் இனப்பெருக்கத்திற்கு அனுப்பப்படும் என்றும், இதனால் வலிமையான நாட்டு மாடுகள் உருவாகும் என்றும், வலிமையற்ற மாடுகளை உழவுப் பணிக்கு பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர்கள் சுட்டி காட்டினர். எந்த விவசாயியும், தனது வீட்டில் ஒரு நபரை போல வளர்க்கும் காளை மாடுகளை கொல்லமாட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அசருமா அரசுகள்
பேரணியில் பங்கேற்ற பலரும் தாங்களும் கிராமத்தில் பிறந்து வளர்ந்துதான் இன்று அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளோம் என்றும், தமிழர்களின், கிராமத்து கலாசாரத்தின் ஆழம், ஈரம் எங்களுக்கும் தெரியும் என்றும் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்களும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், தமிழக மற்றும் மத்திய அரசுகள் இன்னமும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் உறுதியான முடிவை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications