ஃபிபா போட்டியை மட்டுமல்ல.. இதயங்களையும் வென்ற ஜப்பான்.. உலகமே கற்றக்கொள்ள வேண்டிய ஒழுக்கம்!
டோஹா: நேற்று ஜப்பான் ஜெர்மனிக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் வென்றது. ஃபிபா போட்டியில் நடந்த இந்த வெற்றிக்கு பின் ஜப்பான் ரசிகர்கள் செய்த காரியம் பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.
2024 கத்தார் ஃபிபா உலகக் கோப்பை தொடங்கி 1 வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் இந்த தொடர் ஏகப்பட்ட படிப்பினைகளை கொடுத்துவிட்டது.
கத்தார் தொடரில் பல சர்ச்சைகள் நிலவி வருவதற்கு இடையில் இந்த தொடர் ஏகப்பட்ட ட்விஸ்ட் மற்றும் டேர்ன்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் ஆட்டத்தில் ஜிம்பாபே, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகள் பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகளை வீழ்த்தின.
அதை போலவே கால்பந்து தொடரிலும் அதிர்ச்சி ட்விஸ்ட்டுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. முன்னதாக அர்ஜென்டினா அணி சவுதி அரேபியா அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
ஓரினச்சேர்க்கை! அவரா நீங்க? சர்ட்டை கழற்றுங்க.. உலககோப்பை கால்பந்து போட்டி நிருபருக்கு நேர்ந்த கதி
ஜப்பான்
இந்த நிலையில்தான் நேற்று ஜப்பானுக்கு எதிரான போட்டியில் ஜெர்மனி அணி தோல்வி அடைந்தது. ஜெர்மனி அணி உலகக் கோப்பை கால் பந்து தொடரில் ஆண்ட அணிகளில் ஒன்று. பிரேசில் போலவே ஜெர்மனியும் வலிமையான அணி. ஆனால் அந்த ஜெர்மனியை கத்துக்குட்டியான ஜப்பான் வீழ்த்தி உள்ளது. இந்த போட்டியில் முதல் பாதியில் 1 கோலை ஜெர்மனி எடுத்தது. அதன்பின் இரண்டாவது பாதியில் கடைசி 15 நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை ஜப்பான் எடுத்தது. கிட்டத்தட்ட உயிரை கொடுத்து ஆடி ஜப்பான் இந்த மேட்சை வென்றது.
ஜப்பான் வெற்றி
ஜப்பானை பொறுத்தவரை இந்த வெற்றி என்பது வரலாற்று ரீதியாக வெற்றி. 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை வீழ்த்துவது எளிதான காரியம் கிடையாது. அதுவும் ஜப்பான் இருக்கும் குரூப்பே மிகவும் கடினமான குரூப். அந்த குரூப்பில் ஜெர்மனியை வீழ்த்தி தற்போது ஜெர்மனிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து இருக்கிறது ஜப்பான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கடைசி 15 நிமிடம் வரை ஆட்டம் ஜெர்மனி கையில்தான் இருந்தது. இன்னும் 900 நொடிகளில் போட்டியை வென்றுவிடுவோம் என்று ஜெர்மனி நம்பிக்கையாக இருந்தது. இரண்டு அணி வீரர்களும் களைப்பாகவே இருந்தனர்.
ஹீரோ
படம் முழுக்க அடி வாங்கும் ஹீரோ கடைசி நிமிடத்தில் மாஸ் காட்டி வில்லனை புரட்டி எடுப்பதுதான் எல்லோருக்கும் பிடிக்கும். எம்ஜிஆரோ, ரஜினியோ முதல் அடியே வில்லனை அடித்தால் நன்றாக இருக்காது. முகத்தில் பொங் என்று குத்து வாங்கி ரத்தம் வந்த பின் அடித்தால்தான் அதில் ஒரு "இது" இருக்கும். அப்படித்தான் நேற்று நடந்த போட்டியிலும் ஜப்பான் அணி முதல் 75 நிமிடங்கள் அடி வாங்கிவிட்டு கடைசி 15 நிமிடங்கள் அடித்து துவம்சம் செய்து இருக்கிறது. 75வது நிமிடத்தில் ரின்சு, 83வது நிமிடத்தில் டக்குமா இருவரும் மாற்றி மாற்றி அடித்த கோல்கள் காரணமாக ஜப்பான் அணி எளிதாக வென்றது.
என்ன செய்தனர்
நேற்று இவர்களின் வெற்றியை உலகமே கொண்டாடியது. ஜெர்மனியை வீழ்த்திவிட்டது ஜப்பான். இந்த தொடரின் இரண்டாவது ஆச்சரியகரமான வெற்றி என்று உலகமே இந்த வெற்றியை திரும்பி பார்த்தது. ஆனால் ஜப்பான் ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் குதிக்கவில்லை. மைதானத்தில் டான்ஸ் ஆடி, பாட்டில்களை உடைத்து கொண்டாடவில்லை. மாறாக அவர்கள் செய்த காரியம்தான் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. நேற்று ரசிகர்கள் எல்லோரும் செல்லும் வரை ஜப்பான் ரசிகர்கள் பலர் மைதானத்திலேயே காத்து இருந்தனர். கலீபா மைதானத்திலேயே அமர்ந்து இருந்தனர்.
சுத்தம் செய்தனர்
ரசிகர்கள் சென்ற பின் மைதானத்தை இவர்கள் சுத்தம் செய்ய தொடங்கினார்கள். இதற்காக பெரிய பிளாஸ்டிக் பேக்குகளை அவர்கள் தங்களுடன் கொண்டு வந்து இருந்தனர். அந்த பேக்குகளை கொண்டு மைதானத்தில் ரசிகர்கள் இருக்கும் பகுதிகளை மொத்தமாக சுத்தம் செய்தனர். சின்ன குப்பை இல்லாத அளவிற்கு மைதானத்தை துடைத்து எடுத்தனர். பாட்டில்களை எல்லாம் தனி தனியாக பிரித்து வைத்தனர். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று இரண்டாக பிரித்து கட்டினார்கள். மொத்தம் 20 பைகளில் குப்பைகளை இவர்கள் எடுத்து வைத்தனர். அவர்கள் இருந்த இடம், அவர்கள் போட்ட குப்பைகளை மட்டும் இவர்கள் சுத்தம் செய்யவில்லை.
ஜெர்மனி
ஜெர்மானியர்கள் போட்ட குப்பைகளையும் இவர்கள் சுத்தம் செய்தனர். இந்த புகைப்படங்கள்தான் இணையம் முழுக்க வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது. ஜப்பான் ரசிகர்கள் உலக நாடுகளையே தற்போது கவர்ந்து உள்ளனர். மக்கள் இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். உலக நாடுகள் இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒழுக்கம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். சுத்தம் என்றால் இதுதான். மிகவும் நாகரீகமாக இருக்கிறார் என்று உலக நாட்டு கால்பந்து வீரர்கள் இதை பாராட்டி உள்ளனர். இது தொடர்பாக இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளனர். இந்த போட்டியில் மட்டும் இல்லை. இதற்கு முந்தைய போட்டியிலும் ஜப்பான் ரசிகர்கள் பலர் இப்படித்தான் நடந்து கொண்டார்கள். இதற்கு முன் நடந்த வேறு ஒரு போட்டியில் ஜப்பான் ரசிகர்கள் போட்டி முடிந்து இதேபோல் சுத்தம் செய்தனர். ஜப்பான் உலகிலேயே சுத்தமான, ஒழுக்கமான நாடுகளில் ஒன்று. இதை தற்போது ஜப்பான் ரசிகர்கள் மெய்ப்பித்து உள்ளனர்.