நிலநடுக்க பீதி... ‘அவசரத்திற்கு’ உதவ லிப்டுகளில் பாத்ரூம் அமைக்க ஜப்பான் முடிவு
டோக்கியோ : நிலநடுக்க சமயங்களில் லிப்டுகளில் சிக்கிக் கொள்ளும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, லிப்டுகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஜப்பான் அரசு தீவிரமாக்கியுள்ளது.
ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமையன்றும் அங்கு 7.8 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இத்தகைய நிலநடுக்கத்தின் போது அடுக்குமாடிக் கட்டிடங்களில் உள்ள லிப்டுகள் செயலிழந்து விடுகின்றன.

இவ்வாறு பழுதாகும் லிப்டுகள் சில மணி நேரங்களுக்குப் பின்னரே சரி செய்யப் படுகின்றன. அத்தகைய சமயங்களில் லிப்டில் சிக்கிக் கொள்ளும் மக்கள், குடிநீர் கிடைக்காமலும், கழிப்பறைக்கு செல்ல முடியாமலும் பெரும் அவதி அடைகின்றனர்.
எனவே, அத்தகைய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜப்பான் அரசு அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில் லிப்ட்களில் கழிவறைகள் அமைக்க தீர்மானித்தது. இது தொடர்பாக அந்நாட்டு உட்கட்டமைப்பு அமைச்சகத்துக்கும், லிப்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் லிப்டில் அவசர கால கழிவறைகள் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அதே போல் குடிக்க தண்ணீரின்றி தவிப்பவர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் குடிநீர் வசதி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் செயல்பாட்டில் உள்ள 6 லட்சத்து 20 ஆயிரம் லிப்டுகளில் 20 சதவீதம் தலைநகர் டோக்கியோவில் தான் உள்ளது. எனவே, இவையனைத்திலும் விரைவில் கழிவறைகள் அமைக்கப்பட உள்ளன.
அடுத்து வர உள்ள காலங்களில் மிகத்தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டால் 17000 மக்கள் லிப்டில் சிக்கி தவிக்க நேரிடும் என கருதும் ஜப்பான் அரசு, முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications