பிரஸ்ஸல்ஸ்: தீயாக பரவிய ஆடை கிழிந்து ரத்தம் வடிய இருக்கும் ஜெட் ஏர்வேஸ் ஊழியை போட்டோ
பிரஸ்ஸல்ஸ்: பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயம் அடைந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியை நிதி சவுபேகரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களான மும்பையை சேர்ந்த நிதி சவுபேகர்(40) மற்றும் அமித் மோத்வானி ஆகியோர் காயம் அடைந்தனர்.
ஜெட் ஏர்வேஸ் இன் பிளைட் மேனேஜராக இருக்கும் நிதி கடந்த 20 ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணிபுரிகிறார். பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இருந்து கிளம்புகையில் குண்டு வெடித்ததில் நிதியின் ஆடை கிழிந்து முகத்தில் ரத்தமும் தூசியுமாக அவர் அதிர்ச்சியில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
இந்நிலையில் மக்கள் #PrayForNidhi என்ற ஹேஷ்டேக்குடன் நிதிக்காக பிரார்த்தனை செய்யுமாறு ட்வீட்டியுள்ளனர். மும்பையில் உள்ள நிதியின் கணவர் ருபேஷ் மற்றும் இரண்டு குழந்தைகளும் அவரை நினைத்து கவலையில் உள்ளனர்.
ஆன்ட்வர்பில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ருபேஷ் தனது குழந்தைகளுடன் விரைவில் பிரஸ்ஸல்ஸ் செல்ல உள்ளார். குண்டுவெடிப்பு சம்பவத்தால் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் உடனே அங்கு கிளம்பவில்லையாம்.