20 இந்தியர்கள் தங்கியுள்ள பமாகோ ராடிசன் ப்ளூ ஹோட்டலில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு
பமாகோ: மாலி தலைநகர் பமாகோவில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள், ஊழியர்கள் என 170 பேரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அந்த ஹோட்டலில் 20 இந்தியர்கள் தங்கியுள்ளனர்.
மாலி தலைநகர் பமாகோவில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலுக்கு தூதரக கார்களில் தீவிரவாதிகள் வந்துள்ளனர். அவர்கள் ஹோட்டலில் வெளிநாட்டவர்கள் அதிகம் தங்கியுள்ள 7வது மாடிக்கு சென்று கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஹோட்டலில் தங்கியுள்ளவர்கள் 140 பேர், ஊழியர்கள் 30 பேர் என 170 பேரை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பமாகோவில் உள்ள அமெரிக்கர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் பாரீஸில் 6 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த சூழலில் இந்த வெள்ளி அன்று ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
#MaliAttack : Acc'g to current info there are 20 Indians staying in the hotel. Our Amb is continuously in touch with them & monitor'g sitn
— Vikas Swarup (@MEAIndia) November 20, 2015
#MaliAttack : தாக்குதல் நடந்துள்ள ஹோட்டலில் 20 இந்தியர்கள் தங்கியுள்ளனர். மாலியில் உள்ள இந்திய தூதரகம் அவர்களுடன் தொடர்பில் உள்ளது. மேலும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
குர்ஆன்:
ஹோட்டலின் 7வது மாடியில் 10 தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. தீவிரவாதிகள் குர்ஆன் வசனங்களை(சூராக்களை) கூறிய 20 முஸ்லீம் பிணையக்கைதிகளை அங்கிருந்து பத்திரமாக செல்ல அனுமதித்துள்ளனர். மேலும் ஹோட்டலில் தங்கியிருந்த துருக்கி ஏர்லைன்ஸ் ஊழியர்கள் 5 பேர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கியால் சுட்டதில் பலியானவர்களில் 2 பேர் மாலியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் பிரான்ஸை சேர்ந்தவர். ஏர் பிரான்ஸ் விமான ஊழியர்கள் அதிக அளவில் தங்கும் ரேடிசன் ப்ளூ ஹோட்டல் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.