சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்பதின நிகழ்ச்சி
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளை 23-03-2014 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை "சமய நல்லிணக்க குடும்பதின நிகழ்ச்சியை" சிங்கப்பூர் கிழக்கு கடற்கரை பூங்காவில் மிகச் சிறப்பாக நடத்தியது.
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் சங்கத்தின் தலைவர் ஹாஜி நசீர் கனி, ஜேபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ நிபுணரும், பேராசிரியருமான திருமதி வனஜா கலைச்செல்வன், பெண்களுக்கான மருத்துவ சொற்பொழிவும், கேள்வி பதில் அங்கமும் நடத்தினார்.
ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையிலும், சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தி ஒன்றுபட்ட சமுதாயமாக வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்தியும் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. மதிய உணவும், தேநீர் விருந்தும், அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இக்குடும்பத்தின நிகழ்ச்சியில் சுமார் 300 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.