ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.493 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
நியூஜெர்சி: அமெரிக்காவில் ஜான்சன் அன்டு ஜான்சன் பவுடரை தொடர்ந்து பயன்படுத்தி பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.493 கோடி இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் ஃபாக்ஸ் (62) இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜாக்குலின் ஃபாக்ஸ் இறந்தார்.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களைப் பயன்படுத்தியதாலே அவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறிய அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் அதனுடைய உற்பத்தி பொருளான முகப்பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதை நுகர்வோருக்கு தெரிவிக்க தவறிவிட்டது என தெரிவித்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட ஜாக்குலின் குடும்பத்தாருக்கு, 72 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டனர். இதன் இந்திய மதிப்பு ரூ. 493.50 கோடி ஆகும். இது சம்பந்தமான சுமார் 1000 வழக்குகள் மிசௌரி மாநில நீதிமன்றத்திலும், சுமார் 200 வழக்குகள் நியூஜெர்ஸி நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர்களில் 'டால்கம்' பயன்படுத்தப்படுகிறது. இந்த டால்கம் பொருளால் புற்றுநோய் ஏற்படுகிறது என தெரியவந்ததையடுத்து, அமெரிக்காவில் பெரும்பாலான அழகுசாதனப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டால்கம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. எனினும், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தொடர்ந்து டால்கமை பயன்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில், ஜான்சன் & ஜான்சன் பவுடரை பயன்படுத்த இந்திய பெண்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.