"மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
ஒட்டாவா: கனடாவில் வைத்து பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பி இருந்த நிலையில், இந்த விவகாரத்தில் கனடா பிரதமர் ட்ரூடோ மீண்டும் சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்று கனடா. அங்கே உள்ள இந்தியர்களில் சிலர் காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தையும் ஆதரவாக இருக்கிறார்கள். அங்கே காலிஸ்தான் இயக்கத்திற்கு எந்தவொரு தடையும் இல்லாததால் அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறது.

அப்படி அங்கே சுதந்திரமாக இயங்கி வந்த காலிஸ்தான் ஆதரவாளர் தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இவர் கடந்தாண்டு கனடாவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பகீர் கருத்துகளைக் கூறியுள்ளார்.
பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் இந்திய அரசுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட உள்ளதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்திய அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த கனடா பிரதமர், "கனட மண்ணில் கனடா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டதை நாங்கள் மிகவும் சீரியஸான விவகாரமாக எடுத்துக் கொள்வோம். இந்த விவகாரத்தில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் உள்ளன. இதை எங்களால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. வெளிநாட்டு அரசுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து கனடா நாட்டை சேர்ந்த அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு, பன்முகத்தன்மை கொண்ட நாடாக எங்களுக்கு இருக்கிறது.
இந்த விவகாரத்தில் கனட அரசு நிச்சயம் உரிய விசாரணையை மேற்கொள்ளும். எங்கள் நாட்டில் சட்டத்தின்படியே ஆட்சி நடக்கிறது. எங்களின் நீதி அமைப்பு மற்றும் போலீஸ் அமைப்பு சுதந்திரமாக இயங்கும். இந்த விவகாரத்தில் உரிய விசாரணைகள் நடைபெறுவதை உறுதி செய்வதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய இந்திய அரசுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படுகிறோம்.
அதே நேரத்தில், நாங்கள் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம். இந்திய அரசுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட நாங்கள் விரும்புகிறோம், இது எப்படி நடந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் எந்தவொரு சர்வதேச சக்தியாலும் கனடா மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
கனடா நாட்டை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லிக் கடந்த 2020ஆம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. இந்தச் சூழலில் தான் அவர் கடந்த 2023 ஜூன் 18ஆம் தேதி கனடாவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் உள்ள ஒரு குருத்வாராவிலிருந்து அவர் வெளியே வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் பங்கு இருப்பதாக கனட பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார்,. இது சர்வதேச அளவில் மிகப் பெரிய அளவில் பரபரப்பைக் கிளப்பியது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இந்தியா மீது இப்படியொரு குற்றச்சாட்டைக் கனடா சுமத்தி உள்ளதாக இந்தியா தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தை தொடர்ந்து இந்தியா கனடா உறவு மிக மோசமாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications