மும்பை பாணியில் பாகிஸ்தான் ஏர்போர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 28 பேர் சாவு
கராச்சி: பாகிஸ்தானின், கராச்சி விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உள்பட மொத்தம் 28 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் வர்த்த தலைநகரான கராச்சியில் உள்ளது ஜின்னா சர்வதேச விமான நிலையம். இங்கு நேற்று நள்ளிரவில், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் போல் உடையணிந்து நுழைந்த தீவிரவாதிகள் 10 பேர், துப்பாக்கி மற்றும் கையெறி வெடிகுண்டுகளை பயன்படுத்து திடீர் தாக்குதல் நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலை தொடர்ந்து, அங்கு விமான சேவை நிறுத்தப்பட்டு, அனைத்து வழிகளும் மூடப்பட்டன.

தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே பல மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை இன்று காலை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதில், 10 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், ஏர்போர்ட் முழுமையும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்தாகவும் ராணுவம் தெரிவித்தது. இந்த தாக்குதலில் விமானம் ஏதும் சேதமடையவில்லை என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இருப்பினும் இன்று மாலை வரையில் கராச்சி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டதும், நடைபெற்ற தேடுதல் வேட்டையில், ராக்கெட் லாஞ்சர்கள், வெடிகுண்டுகள் கண்டுபிடித்து கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 28 பேர் இதில் பலியாகினர். இதனிடையே, தாக்குதல் சம்பவத்துக்கு தாலிபான் அமைப்பை சேர்ந்த இ தெக்ரிக் பிரிவு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம்தேதி மும்பை ரயில் நிலையத்தில் இதுபோன்ற கண்மூடித்தனமான தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications