சுஷ்மாவை மட்டுமல்ல பிரிட்டன் எம்.பியையும் பதம் பார்த்த லலித் மோடி விவகாரம்!
லண்டன்: லலித் மோடியை போர்ச்சுக்கலுக்கு பத்திரமாக அனுப்ப உதவி செய்ததாக பிரிட்டன் நாட்டின் தொழிலாளர் கட்சி துணை தலைவர் மற்றும் அந்த நாட்டின் அதிகாரம்மிக்க ஆசியர்களில் ஒருவரான எம்.பி கெய்த் வஸ் மீது விசாரணை நடைபெற உள்ளதாம்.
ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி, பல்வேறு சட்டவிரோத குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதால், இந்தியாவில் இருந்து தப்பி 2010ல் லண்டன் சென்றார்.
லலித் மோடி தனது மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சையளிக்க லண்டனில் இருந்து போர்ச்சுக்கல் செல்ல விசா கேட்டிருந்தார். இந்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு கெய்த் வஸ், யூ.கே. விசா இயக்குநர் ஜெனரலுக்கு இ-மெயில் சிபாரிசு அனுப்பியதாக தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. ஆன்ட்ரியூ பிரிட்ஜென் இதுகுறித்து கூறுகையில், கெய்த் வஸ் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். கெய்த் வஸ் இதுகுறித்து கூறுகையில், இந்திய அரசியலில் நான் பங்கெடுக்க விரும்பவில்லை. 230 கடிதங்களுக்கு நான் சிபாரிசு செய்தேன். அதில் லலித் மோடியும் ஒருவர். எனக்கு இந்தியாவில் இருந்து எந்த நெருக்கடியும் வரவில்லை என்று கூறியுளளார்.
லலித் மோடி விவகாரம், மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் காலை கடித்து, தற்போது, பிரிட்டன் எம்.பி, கழுத்தை கடிக்கும் அளவுக்கு சென்றுள்ளது.