கென்ய பல்கலைகழகத்தில் தீவிரவாத தாக்குதல்- 147 மாணவர்கள் சுட்டுக் கொலை
கரிஸ்ஸா: கென்யாவில், பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 147 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த 1998இல் கென்யாவில் அமெரி்க்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

கென்யாவின் வடகிழக்கு பகுதியில் கரிஸ்ஸா என்ற இடத்தில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி வளாகத்திற்குள் முகமூடி அணிந்தபடி நுழைந்த நான்கு தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினார்கள்.
கையறி வெடிகுண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. விடுதிகளில் மாணவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

தீவிரவாதிகள் இஸ்லாமிய மாணவர்களை வெளியேற்றிவிட்டு, கிறிஸ்தவ மாணவர்களையும் பிறரையும் கொன்றுள்ளனர். தகவலறிந்த கென்யப் படையினர் அங்கு வந்து கல்லூரி வளாகத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
கிட்டதட்ட 16 மணி நேரம் நடைபெற்ற கடும் சண்டைக்குப்பிறகு தீவிரவாதிகள் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கென்ய அரசு அறிவித்துள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலில் 79 பேர் படுகாயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் சோமாலியாவின் ஷெபாப் என்ற பயங்கவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அல் கைதா இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள்.












Click it and Unblock the Notifications