மாறும் வங்கதேச அரசியல்.. முன்னாள் பிரதமர் கலிதா ஜியா சிறையில் இருந்து விடுதலை! அதிரடி உத்தரவு
டாக்கா: தற்போது சிறையில் உள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்வதாக வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் இப்போது உத்தரவிட்டார். ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்தில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கு இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர் போராட்டம் இப்போது வன்முறையாக மாறியுள்ளது.

அங்கு நிலைமை மிக மோசமாக இருக்கும் சூழலில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்தில் இருந்து வெளியேறி டெல்லி அருகே காசியாபாத்தில் இப்போது இருக்கிறார்.
விடுதலை: இதற்கிடையே வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை சிறையில் இருந்து விடுதலை செய்வதாக வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இருக்கும் நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது. வங்கதேச அதிபர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகே வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவர் பேகம் கலிதா ஜியாவை உடனடியாக விடுவிக்க அந்நாட்டின் அதிபர் ஷஹாபுதீன் உத்தரவிட்டார்.
யார் இவர்: வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சிக்குத் தலைமை வகித்தவர் தான் இந்த கலீதா ஜியா. ஷேக் ஹசீனாவை மிகத் தீவிரமாக எதிர்த்து வந்த கலீதா ஜியா கடந்த 2018ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஊழல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த 78 வயதான கலீதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் தான் அவரை விடுவிக்க அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கலீதா ஜியா கடந்த 1991 முதஸ் 1996 வரை, 2001 முதஸ் 2006 வரை என இரண்டு முறை பிரதமராக இருந்தவர். மேலும், அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற சிறப்பையும் பெற்றவர். கலீதா ஜியாவை தொடர்ந்தே ஷேக் ஹசீனா 1996இல் முதல் முறையாகப் பிரதமரானது குறிப்பிடத்தக்கது. இந்த கலீதா ஜியா தான் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்போது ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், ஜியாவை சிறையில் இருந்து விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அங்கே தற்போது ஆட்சியை அமைத்துள்ள ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர், பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications