உக்ரைனில் இந்திய மாணவர்களை காப்பாற்ற சூளுரைக்கும் கொல்கத்தா டாக்டர்
கீவ்: ‛‛இந்திய மாணவர்களை பத்திரமாக வெளியேற்றிய பின்னரே நாடு திரும்புவேன்'' என உக்ரைன் போருக்கு நடுவே அங்குள்ள கொல்கத்தா டாக்டர் கூறியுள்ளார். மேலும் உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை வெளியேற்றும் பணியில் தொடர்ந்து அவர் ஈடுபட்டு வருகிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 10வது நாளான இன்றும் போர் தீவிரமடைந்தது. பொதுமக்களின் நலன்கருதி வோல்னோவாகா, மரியூபோல் நகரங்களில் போர் தற்காலிகமா நிறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
அதேவேளையில் ரஷ்யா பிற இடங்களில் போர் நடவடிக்கையை உக்கிரமாக்கி உள்ளது. தலைநகரை எப்படியாவது கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா உள்ளது. இதற்கிடையே சுமி, கீவ், செர்னிஹிவ் நகரங்களில் தாக்குதல் தீவிரப்படுத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது.

மாணவர்கள் மீட்பு
இதனால் உக்ரைனில் பல்வேறு நகரங்களில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்கள் ‛ஆபரேஷன் கங்கா' மூலம் விமானங்களில் மீட்கப்படுகின்றனர். அதாவது உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் மாணவர்கள் அண்டை நாடுகளான ருமேனியாவின் புக்காரெஸ்ட், ஹங்கேரியின் புத்தாபெஸ்ட், போலந்தின் ரிசோ, சுலோவாகியாவின் கோசிஸ் நகர்களில் இருந்து விமானங்களில் தாயகம் திரும்புகின்றனர்.

கீவ், சுமியில் சிக்கல்
மாணவர்கள் மீட்பு பணியை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி ஹங்கேரியிலும், ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியாவிலும், கிரண் ரிஜிஜூ சுலோவாகியாவிலும், வி.கே.சிங் போலந்திலும் ஒருங்கிணைப்பு செய்து வருகின்றனர். இருப்பினும் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் சுமி நகரங்களில் இன்னும் இந்திய மாணவர்கள் உள்ளனர். இவர்கள் வெளியேறுவதில் சிக்கல் நிலவுகிறது. மத்திய அரசு தங்களை மீட்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசும் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

கொல்கத்தா டாக்டர்
இந்நிலையில் போருக்கு நடுவே உக்ரைன் தலைநகர் கீவ்வில் கொல்கத்தாவை சேர்ந்த டாக்டர் பிரித்வி ராஜ் கோஸ் (வயது 37) என்பவர் உள்ளார். இவர் இந்தியாவில் இருந்து அங்கு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் மாணவர்கள் அனைவரையும் உக்ரைனில் இருந்து வெளியேற்றிய பிறகுதான் தாயகம் திரும்புவதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி பிரித்வி ராஜ் கோஸ் கூறியதாவது:

விருப்பம் இல்லை
நான் கீவ் நகரில் சிக்கியுள்ளேன். போர் நடந்தாலும், வாய்ப்பு கிடைத்தாலும் இந்தியா செல்ல விருப்பம் இல்லை. கீவ் நகரில் இருந்த 350 மாணவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இவர்கள் அனைவரும் எனது மாணவர்கள். மேலும் சில ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது மாணவர்களுக்கும் உதவும்படி கூறியுள்ளனர். குறிப்பாக சுமி நகரில் தவிக்கும் மாணவர்களை மீட்க வேண்டியுள்ளது.

இந்தியா எப்போது
என்னை நினைத்து எனது பெற்றோர் கவலையடைவதை உணர முடிகிறது. ஆனால் எனது பொறுப்பை நான் தானே செய்ய வேண்டும். மாணவர்களை பத்திரமாக இந்தியா அனுப்புவதாக அவர்களின் பெற்றோர்களிடம் உறுதி அளித்துள்ளேன். இதை முடித்துவிட்டு இந்தியா திரும்புவேன். இதுபோன்ற பிரச்சனைகளை நான் 2013-2014ம் ஆண்டில் சந்தித்து உள்ளேன். அப்போது இளம்வயதில் இருந்தேன். அனுபவம் இல்லை. இப்போது பிரச்சனையை சமாளிக்கும் திறனை நன்றாக பெற்றுள்ளேன்'' என்றார்.

பெற்றோர் பெருமை
இவரது தாய் பிரடாடி கூறுகையில், ‛‛எனது மகனை நினைத்தால் பெருமையாக உள்ளது. அவனும் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும். அவனுக்காகவும், மாணவர்களுக்காகவும் கடவுளை பிரார்த்திக்கிறேன்'' என்றார். அவரது தந்தை பிரதீப் கோஸ் கூறுகையில், ‛‛உக்ரைனில் நாட்டில் உள்ள இந்திய மாணவர்கள் எனது மகனை அண்ணனாகவம், பாதுகாவலர்களாகவும் பார்க்கின்றனர். எப்படி அவர்களை விட்டு என்மகன் நாடு திரும்ப முடியும்'' எனக்கூறி பெருமையடைந்தார்.












Click it and Unblock the Notifications