வேகமாகப் பரவும் 'ஆட்கொல்லி' எபோலா: லைபீரியாவில் அவசரநிலை பிரகடனம்
மான்ரோவியா: எபோலோ வைரஸ் வேகமாக பரவி வருவதால் மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் ஆட்கொல்லியான எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எபோலா வைரஸ் தாக்கி சியர்ரா லியோன், லைபீரியா, கினியா, நைஜீரியாவில் இதுவரை 900க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் எபோலா வைரஸ் வேகமாக பரவுவதால் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார் லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீஃப்.
இது குறித்து அவர் புதன்கிழமை இரவு கூறுகையில்,
அவசர நிலை குறைந்தது 90 நாட்களுக்கு அமலில் இருக்கும். எபோலாவின் அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே போகிறது. அறியாமை, வறுமை, கலாச்சார பழக்கவழக்கங்கள் ஆகியவை வைரஸ் பரவுவதை மேலும் மோசமாக்கியுள்ளன என்றார்.
முன்னதாக எபோலா வைரஸ் பரவுவதை தடுக்குமாறு கடவுளை வேண்டிக் கொண்டு 3 நாட்கள் விரதம் இருந்து பிரார்த்தனை செய்யுமாறு எல்லன் மக்களை கேட்டுக் கொண்டார். லைபீரியாவில் மட்டும் 300 பேர் எபோலா வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications