ஐஎஸ்ஐஎஸ்ஸில் சேர நகையை திருடி நாட்டைவிட்டு வெளியேறிய 3 லண்டன் பள்ளி மாணவிகள்
லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியாவுக்கு பயணம் மேற்கொள்ள லண்டனைச் சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் வீட்டில் இருந்த நகைகளை திருடி விற்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்த பள்ளி மாணவிகளான கதீஜா சுல்தானா(16), ஷமீமா பேகம்(15) மற்றும் அமீரா(15) ஆகியோர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர பெற்றோருக்கு தெரியாமல் நாட்டை விட்டு கடந்த மாதம் வெளியேறினர்.

அவர்கள் லண்டனில் இருந்து துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லுக்கு சென்றனர். அங்கிருந்து அவர்கள் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.
நகை திருட்டு
சிரியா செல்ல அந்த சிறுமிகள் டிராவல் ஏஜெண்டிடம் ரூ.95 லட்சம் அளித்துள்ளனர். அந்த பணத்தை புரட்ட அவர்கள் குடும்பத்து நகைகளை திருடி விற்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ்
இங்கிலாந்தைச் சேர்ந்த 26 இளம்பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா சென்றுள்ளனர். அதில் அந்த 3 சிறுமிகளும் அடக்கம் என்று லண்டன் மாநகர துணை கமிஷனர் ரவ்லி தெரிவித்துள்ளார்.
கடிதம்
டிசம்பர் மாதம் ஷமீமா, கதீஜா, அமீரா படித்த பள்ளியில் படித்த மாணவி ஒருவர் சிரியா சென்றுவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த 3 மாணவிகளிடம் பேசி அவர்களிடம் மேலும் பேச பெற்றோரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த மாணவிகள் போலீசார் அளித்த கடிதத்தை பெற்றோரிடம் கொடுக்கவே இல்லை.
அமீரா
என் மகள் இருட்டினால் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறுபவள். அவளா சிரியா வரை சென்றுள்ளாள் என்று என்னால் நம்ப முடியவில்லை. போலீசார் அளித்த கடிதம் என் மகளை பீதியடைய வைத்துள்ளது. என் மகள் வீடு திரும்ப வேண்டும் என்று அமீராவின் தந்தை ஹுசைன் தெரிவித்துள்ளார்.
கர்தாஷியன்
என் சகோதரி பிற இளம் பெண்களைப் போன்று தான் இருந்தார். அவர் தீவிரவாதத்தின் மீது ஆர்வம் காட்டவில்லை. அவர் டிவியில் கர்தாஷியன் சகோதரிகள் வரும் ரியாலிட்டி ஷோவை விரும்பி பார்ப்பார் என்று ஷமீமாவின் சகோதரி சாஹிமா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications