கொரோனாவை மறக்க மாணவர்களுக்கு லாலி பாப்.. விந்தையான அறிவிப்பால் பதவியை பறிகொடுத்த மடகாஸ்கர் அமைச்சர்
மடகாஸ்கர்: கொரோனா ஏற்படுத்திய கசப்பான தாக்கத்தை மறப்பதற்காக பள்ளி மாணவர்களுக்கு லாலி பாப் மிட்டாய்கள் வழங்கப்படும் என அறிவித்த மடகாஸ்கர் அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆப்பிரிக்க பிராந்தியத்தில் அமைந்துள்ள மடகாஸ்கரில் கொரோனாவை மறப்பதற்காக பள்ளி மாணவர்களுக்கு தலா மூன்று லாலி பாப் மிட்டாய்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் ரிஜாசோவா ஆன்ட்ரியா. லாலி பாப் மிட்டாய்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.15 கோடி நிதியும் தன் துறை சார்பில் ஒதுக்கீடு செய்தார்.

இதற்கு அந்நாட்டில் கடும் விமர்சனங்களும், ஆட்சேபனைகளும் எழுந்த நிலையில் மடகாஸ்கர் அமைச்சரின் இந்த நடவடிக்கையை உலக நாடுகள் கேலியும், கிண்டலும் செய்தன. இதனிடையே கல்வித்துறை அமைச்சர் ரிஜாசோவா ஆன்ட்ரியாவின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரி ரஜோலினா அவரது பதவியை பறித்து நடவடிக்கை மேற்கொண்டார்.
கொரோனா காலம் மாணவர்களுக்கு கசப்பான அனுபவங்களை தந்துள்ளதாகவும், அதிலிருந்து அவர்களை மீட்பதற்காகவே லாலி பாப் கொடுக்கும் திட்டத்தை தான் முன்னெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் ரிஜா சோவா ஆன்ட்ரியா. இதனிடையே உலகமே கொரோனாவுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் தடுமாற்றத்தில் உள்ள நிலையில், கோவிட் மூலிகை டானிக் என்ற பெயரில் அந்நாட்டு பாரம்பரிய மருத்துவமுறையை கொண்டு தயார் செய்யப்பட்ட பானத்தை மக்களுக்கு வழங்கி வருகிறது மடகாஸ்கர் அரசு.












Click it and Unblock the Notifications