சிலி நாட்டில் லேசான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.2 அலகுகளாக பதிவு
சாண்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியின் வடக்கு கடற்கரை பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலில் 29 கிலோமீட்டர் ஆழத்திலும், அண்டோபாகஸ்டா நகரின் தென்மேற்கு பகுதியில் இருந்து 132 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. வடக்கு அடாகாமா பாலைவனப் பகுதியில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இருப்பினும் சுனாமி அச்சம் இல்லை என்று அந்நாட்டு கப்பல்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக சிலியில் 2010 ஆம் மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.