இரவோடு இரவாக தாக்கிய நிலநடுக்கம்.. தென் அமெரிக்காவில் 8 ரிக்டரில் பூகம்பம்.. மக்கள் பீதி
பியூனஸ் அயர்ஸ்: தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையிலான டிரேக் பாசேஜ் பகுதியில், ரிக்டர் அளவுகோலில் 8.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பல கிமீ தொலைவுக்கு உணரப்பட்டது. மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
சமீப காலங்களாகவே சக்திவாய்ந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. இதனால் மிக மோசமான இழப்புகளும் பேரழிவும் ஏற்படுகிறது. பூமிக்கு அடியில் உள்ள டெக்டோனிக் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதாலும் உரசுவதாலுமே இந்த நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. அப்படியொரு மோசமான நிலநடுக்கம் தான் இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையிலான டிரேக் பாசேஜ் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.0ஆக பதிவாகியுள்ளது. இதை அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) உறுதிப்படுத்தியுள்ளது. 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இந்தப் பூகம்பம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் இது 7.1 ரிக்டர் என சொல்லப்பட்ட நிலையில், பிறகே அது 8 ரிக்டர் என்பது உறுதியானது.
இந்த சக்திவாய்ந்த பூகம்பத்தால் எந்தவொரு சேதம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. மேலும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. டிரேக் பாசேஜ் என்பது சிலியில் உள்ள கேப் ஹார்னை அண்டார்டிக் தீபகற்பத்திலிருந்து பிரிக்கும் பகுதியாகும். இது உலகின் மிகக் கொந்தளிப்பான நீர்நிலைகளில் ஒன்றாகும்.
இந்தப் பிராந்தியம் தொலைதூரத்தில் இருப்பதாலும், மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் அடுத்த சில மணி நேரம் அல்லது சில நாட்கள் வரை சில அதிர்வுகள் தொடரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications