ஜாகீர் நாயக்கை நாடு கடத்துமாறு மோடி கேட்கவில்லை... மலேசிய பிரதமர் வீசிய புது குண்டு
கோலாலம்பூர்: இஸ்லாமிய சொற்பொழிவாளர் ஜாகிர்நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு பிரதமர் மோடி தன்னிடம் கேட்கவில்லை என மலேசிய பிரதமர் மஹாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இருந்து ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பிரதமர் மோடி பேசியுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் விஜய்கோகலே தெரிவித்திருந்த நிலையில், அதனை மறுத்துள்ளார் மலேசிய பிரதமர் மஹாதீர் முகமது. இது தேசிய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேடப்படும் நபர்
இஸ்லாமிய சொற்பொழிவாளரான ஜாகிர் நாயக் மும்பையில் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார். மேலும், இஸ்லாம் மதம் குறித்தும் சொற்பொழிவு நிகழ்த்துவதை தமது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் பேச்சு கிளர்ச்சியை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி மத்திய அரசு கடந்த 2016-ல் தடைவிதித்ததோடு அவர் மீது பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டன. மேலும், தேடப்படும் நபராகவும் ஜாகிர் அறிவிக்கப்பட்டார்.
இந்திய அரசு தகவல்
இதையடுத்து மலேசியாவில் அடைக்கலம் புகுந்த ஜாகிர் நாயக்கிற்கு அந்நாட்டு அரசு நிரந்தரமாக தங்கும் உரிமை அளித்தது. இந்நிலையில் அண்மையில் ரஷ்யா சென்றிருந்த மோடி, அங்கு மலேசிய பிரதமரை சந்தித்து பேசியதாகவும், அப்போது ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரியதாகவும் வெளியுறவுத்துறை செயலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மலேசியா மறுப்பு
ஆனால் இந்திய வெளியுறவுத்துறை செயலகத்தின் தகவலை மறுக்கும் வகையில் மலேசிய பிரதமர் நேற்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தன்னிடம் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துமாறு கேட்கவில்லை என்றும், இருப்பினும் ஜாகிரை ஏதேனும் ஒரு நாட்டுக்கு நாடு கடத்த மலேசிய அரசு முயற்சி செய்து வருவதாகவும் கூறினார். மேலும், ஜாகிர்நாயக் மலேசியாவின் குடிமகன் இல்லாததால் பொதுவெளியில் பேச தமது அரசும் தடை விதித்துள்ளதாக மஹாதீர் முகமது கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications