15 கி.மீ. சுற்றளவில் சிதறிக் கிடக்கும் மலேசிய விமானத்தின் சேத பாகங்கள்!
மாஸ்கோ: உக்ரைனில் மலேசியா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் 15 கிலோ மீட்டர் சுற்றளவில் அதன் சேத பாகங்கள் சிதறிக் கிடந்தது தெரியவந்துள்ளது.
நெதர்லாந்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வந்து கொண்டிருந்த விமானம் கிழக்கு உக்ரைனில் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 295 பயணிகளும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த விமானத்தை ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் உக்ரைன் அரசுதான் சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.
கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் கிரபோவோ என்ற கிராமம் அருகே விழுந்தது. அந்த இடத்தை மீட்பு படையினர் அடைந்தனர். சுமார் 100 பேரின் உடல்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
விமானத்தின் சேத பகுதிகள் சுமார் 15 கி.மீ. சுற்றளவுவரை சிதறி கிடந்ததாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.