ரூ.4,600 கோடி முறைகேடு புகாரிலிருந்து மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் விடுவிப்பு !
கோலாலம்பூர்: சவூதி அரச குடும்பத்திடமிருந்து 68.1 கோடி டாலர் (சுமார் ரூ.4,600 கோடி) முறைகேடாக நன்கொடை பெற்ற குற்றச்சாட்டிலிருந்து மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் (62) நேற்று விடுவிக்கப்பட்டார்.
மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் மீது 68.1 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.4,500 கோடி) நிதி முறைகேடு புகார் தொடர்பாக பிரதான எதிர்க்கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1எம்டிபி என்ற அரசு முதலீட்டு நிதியத்திலிருந்து ரூ.4,500 கோடி நிதி மோசடி செய்து அதனை, தனது சொந்த வங்கிக் கணக்குகளில் போட்டு வைத்ததாக நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவரின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் நன்கொடை பெற்ற குற்றச்சாட்டிலிருந்து அவர் நேற்று விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து அட்டர்னி ஜெனரல் முகமது அபண்டி அலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சவூதி அரேபியாவிலிருந்து பிரதமர் நஜீப் 68.1 கோடி டாலர் நன்கொடை பெற்றது தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் முறைகேடு எதுவும் நடைபெற்றதாகக் கண்டறியப்படவில்லை. அந்த நன்கொடைக்கு பிரதிபலனாக, நஜீப் ரஸாக் தனது பிரதமர் பதவியைப் பயன்படுத்தி எந்தச் சலுகையையும், யாருக்கும் வழங்கியதாக விசாரணையில் தெரியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆதாரங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டு, நன்கொடை பெற்றதில் பிரதமர் நஜீப் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து ரஸாக் நஜீப் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதன்மூலம், இந்தக் குற்றச்சாட்டு காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த நஜீப், அந்த நிர்பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications