"இன்னும் 3 மாசம் தான் டைம்.. உடனே வெளியே போங்க.." இந்தியாவுக்கு மாலத்தீவு அதிபர் கெடு.. பின்னணி என்ன
மாலே: மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் அதிபர் முகமது முய்ஸு, இந்தியப் படைகள் வரும் மே 10ஆம் தேதிக்குள் முழுமையாக மாலத்தீவில் இருந்து வெளியேற்றப்படும் என்று தெரிவித்தார்,
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோசமான உறவு நிலவி வருகிறது. மாலத்தீவின் அதிபராகச் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகமது முய்ஸு அதிபராக வந்தது முதலே அவர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக சில வாரங்களுக்கு முன்பு அவரது அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் மோடி குறித்துக் கூறிய சில கருத்துகள் இரு நாட்டு உறவை மிகக் கடுமையாகப் பாதித்தது.
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு: இந்தச் சூழலில் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றினார். இருப்பினும், இந்த உரையை அந்நாட்டின் இரு முக்கிய எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தன. இந்த இரு எதிர்க்கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் 56 எம்பிக்கள் உள்ளன.
அதேபோல அதிபரின் கட்சியைச் சேர்ந்தவர்களில் ஏழு பேர் நிர்வாக பதவிகளைப் பெற தங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்திருந்தனர். இதனால் மொத்தம் வெறும் 24 எம்பிக்கள் மட்டுமே அவரது உரையைக் கேட்க அமர்ந்திருந்தனர். அங்கே எதிர்க்கட்சிகள் மாலத்தீவு அதிபர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முயல்வது குறிப்பிடத்தக்கது.
3 மாசம் தான்: இதற்கிடையே மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு மீண்டும் இந்தியப் படைகள் தங்கள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். எங்கள் இறையாண்மையில் தலையிடவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ எந்த நாட்டையும் அனுமதிக்க முடியாது என்று முகமது முய்ஸு தெரிவித்துள்ளார். வரும் மே 10 ஆம் தேதிக்குள் இந்தியப் படைகள் அனைத்தும் மாலத்தீவை விட்டு வெளியேறும் என்று இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடும் நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மாலத்தீவில் மொத்தம் மூன்று ராணுவ தளங்கள் உள்ளன. அதில் ஒரு தளத்தில் இருக்கும் இந்திய ராணுவத்தினர் மார்ச் 10ஆம் தேதிக்குள் வெளியேறிவிடுவார்கள்.. மற்ற இரண்டில் உள்ளவர்கள் வீரர்கள் மே 10ஆம் தேதிக்குள் வெளியேறுவார்கள்.. மாலத்தீவில் அவர்கள் தொடர்ந்து இருக்கும் இந்தியாவுடனான ஒப்பந்தத்தை மாலத்தீவு புதுப்பிக்காது. எந்தவொரு நாடும் எங்கள் இறையாண்மையில் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்திய வீரர்கள்: தீவுகள் கூட்டமான மாலத்தீவில், ஒரு தீவில் யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்படும் போது அவர்களை முக்கிய தீவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவும் வகையில் இந்தியா அவர்களுக்கு ஹெலிகாப்டர்களை வழங்கியது. அதைப் பராமரிக்கவும் ஆப்ரேட் செய்யவும் இந்திய ராணுவத்தினரும் மருத்துவ ஊழியர்கள் அங்கு உள்ளனர். இப்படி மொத்தம் சுமார் 90 இந்திய வீரர்கள் அங்கே இருக்கும் நிலையில், அவர்களைத் தான் வெளியேற்ற அதிபர் முகமது முய்ஸு முயன்று வருகிறார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் மாலத்தீவில் இருக்கும் இந்திய வீரர்களை வாபஸ் பெறுவதில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தியா இதை நேரடியா ஒப்புக்கொள்ளவில்லை என்ற போதிலும், தற்போதுள்ள பிரச்சினையைக் களையப் பரஸ்பரம் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இந்தியா அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications