விமானத்தில் தம்மடிக்க முயன்றவரின் கை, கால்களை கட்டிப்போட்ட சிப்பந்திகள்
மெல்போர்ன்: சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வந்த விமானத்தில் புகைப்பிடிக்க முயன்ற நபர் தனது இருக்கையில் கட்டிப் போட்டு வைக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் இருந்து கிளம்பிய எமிரேட்ஸ் விமானம் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகருக்கு கிளம்பியது. இந்த விமானத்தில் பயணம் செய்த மாதியாஸ் ஜார்க்(54) என்பவர் புகைப்பிடிக்க அடிக்கடி முயன்றார். விமானத்தில் புகைப்பிடிக்கக் கூடாது என்று கூறிய சிப்பந்திகளை தாக்க பாய்ந்தார்.
அவரது அட்டூழியம் தாங்க முடியாமல் அவரை இருக்கையில் கை மற்றும் கால்களை கட்டிப் போட்டுவிட்டனர் சிப்பந்திகள். விமானம் நேற்று அதிகாலை 1.10 மணிக்கு பிரிஸ்பேன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த மாதியாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் பிரிஸ்பேனில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மாதியாஸ் தனது பாஸ்போர்ட்டை ஆஸ்திரேலிய போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதி அளித்தால் ஜாமீன் வழங்கப்படும் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்தார். ஆனால் இந்த நிபந்தனைகளை ஏற்க மாதியாஸ் மறுத்துவிட்டார். இந்நிலையில் அவர் வரும் 10ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.