அய்யா, தமிழக மீனவர்களிடம் மனிதநேயம் காட்டுங்கள்... ராஜபக்சேவிடம் மன்மோகன் சிங்!
நேபியிடா: மியான்மரில் நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மனிதநேரம் தேவை என வலியுறுத்தியுள்ளார்.
பிம்ஸ்டெக் என்ற பெயரில் பல்துறை தொழில் நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக வங்கக்கடல் நாடுகள் ஓரணியாக செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பில், இந்தியா, வங்காளதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய 7 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

மியான்மரின் நேபியிடாவில் நடைபெற்ற இந்த பிம்ஸ்டெக் நாடுகளின் மூன்றாவது உச்சி மாநாட்டின் இறுதி நாளான நேற்று பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டு பேசினார்.
இதற்காக இரண்டு நாள் பயணமாக அவர் மியான்மர் சென்றிருந்தார். இம்மாநாட்டின் இடையே பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்து ராஜபக்சே பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், இந்தச் சந்திப்பின் போது இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பிரதமர் மன்மோகன் சிங், ‘இந்திய மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது தொடர்பாக' பேசியதாக தெரிகிறது.
‘இது இந்திய மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் இவ்விவகாரத்தில் இலங்கை மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்' என ராஜபக்சேவிடம் மன்மோகன்சிங் தெரிவித்ததாக இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாத மன்மோகன் சிங் எதிர்ப்புகளை மீறி ராஜபக்சேவை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பு நிகழ்ந்த நேற்றே தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை ராணுவம் கைது செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications