பள்ளி மாணவி பலாத்காரம்... 475 மாணவர்கள், 31 ஆசிரியர்கள், 21 ஊழியர்களிடம் டி.என்.ஏ சோதனை
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தவரைக் கண்டறிவதற்காக சுமார் 500க்கும் மேற்பட்டவர்களிடம் டி.என்.ஏ சோதனை நடத்தியுள்ளனர் அந்நாட்டுப் போலிசார்.
பிரான்ஸ் நாட்டில் அட்லாண்டிக் கடல் பகுதியில் லாரோசெல்லீ நகரத்தில் உள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பள்ளிக் கழிவறைக்கு சென்ற 16 வயது மாணவியை மர்ம நபர்கள் யாரோ பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர்.
அப்போது மின்சாரம் இல்லாததால் பாலியல் பலாத்காரம் செய்த நபரை அம்மாணவியால் அடையாளம் காட்ட இயலவில்லை. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையிலும் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த போது பள்ளியில் இருந்த அனைவரையும் சோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி 475 மாணவர்கள், 31 ஆசிரியர்கள் மற்றும் 21 பள்ளி அலுவலக ஊழியர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. வரும் புதன்கிழமையோடு அனைவரையும் சோதனை செய்து விடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
விரைவில் மாணவியைப் பலாத்காரம் செய்த நபரை கண்டுபிடித்து விடுவோம் என போலீசார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications