மயூரன் சுகுமாறன் – திருந்தி வாழ நினைத்தும் உயிரை இழந்தவரின் கடைசி தருணங்கள்!
இந்தோனேசியா: மயூரன் சுகுமாறன்... இந்தப் பெயரை நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க இயலாது. பிறப்பால் இலங்கைத் தமிழரான இவர், வளர்ந்ததெல்லாம் ஆஸ்திரேலியாவில்.
கால ஓட்டத்தில் பாதை மாறிப் போய், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்தோனேசிய போலீசாரால் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையும் விதிக்கப்பட்டு அது நிறைவேற்றவும் பட்டுவிட்டது.
இந்நிலையில் இந்தோனேசிய சிறையில் அவருடைய கடைசி தருணங்கள் மனதினை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

மரணத்திற்கு முன்பு பிறந்த நாள்
தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் கடந்த 17 ஆம் தேதியன்று தன்னுடைய 34வது பிறந்தநாளினை தான் அடைக்கப்பட்டிருந்த நுஸ்கம்பகன் சிறையிலேயே கொண்டாடியுள்ளார் மயூரன்.

கேக் வெட்டி
அதுதொடர்பான புகைப்படங்களை தற்போது இந்தோனேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பிளாக் பாரஸ்ட் கேக்குடன் அவருடைய நண்பர்கள் சிலரும், மற்றொரு குற்றவாளியான ஆண்ட்ரூசானின் தம்பியும் சிறைக்கு வந்து மயூரனின் பிறந்த நாளினைக் கொண்டாடியுள்ளனர்.

கடைசி நாட்களில் ஓவியம்
தன்னுடைய மிச்ச நாட்களினை ஓவியம் வரைவதில் செலவழித்த மயூரனும், ஆண்ட்ரூவும் திருந்தி வாழ நினைத்தும் இந்தோனேசியாவின் கொடிய சட்ட திட்டங்களில் சிக்கி இரையாகிவிட்டனர் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று. அவர்களுடன் சேர்த்து 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட மைதானம்
இந்த நிலையில் மயூரன் சுகுமாறன் உள்ளிட்டோர் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் குறித்த புகைப்படங்களும் ஆஸ்திரேலிய மீடியாக்களில் வெளியாகியுள்ளன. அதில் அவசரம் அவசரமாக சுத்தம் செய்யப்பட்ட ஒரு மைதானத்தின் மூலையில், தார்பாயில் போடப்பட்ட டென்ட்டுக்குக் கீழே இவர்களை நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.

ஆஸி வருகிறது உடல்கள்
இன்று ஆஸ்திரேலியா சென்றடையும் அவர்களுடைய உடல்களுக்கு ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications