உடைக் குழப்பம்: நகராட்சி ஊழியர்களை திருடர்கள் என கருதி சுட்டுக் கொன்ற ராணுவம்
மெக்சிகோ சிட்டி: திருடர்கள் எனத் தவறாக நினைத்து ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி மெக்சிகோ நாட்டில் 4 நகராட்சி ஊழியர்கள் பரிதாபமாகப் பலியானார்கள்.
மெக்சிகோ நாட்டில் போதைப் பொருள் கடத்தும் கும்பல்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. எனவே, அவற்றைத் தடுக்கும் நோக்கத்தில் அவர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக சந்தேகிக்கும் இடங்களில் கடண்டஹ் 2006ம் ஆண்டு முதல் மெக்சிகன் அரசு ராணுவத்தினரைக் காவலுக்கு வைத்துள்ளது.
அவ்வப்போது, ராணுவத்தினருக்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல் நடைபெறுவதுண்டு. இத்தகைய கடத்தல் சம்பவ வன்முறைகளினால் இதுவரை 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று ஆர்சிலியா நகரத்தில் ரோந்துப் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த சிலர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில், குண்டடி பட்ட நான்கு பேரும் பரிதாபமாகப் பலியானார்கள்.
அதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் மேற்கொண்ட விசாரணையில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் நகராட்சி ஊழியர்கள் என்பது தெரிய வந்தது. பலியானவர்களில் நகராட்சி போக்குவரத்துத்துறையின் இயக்குனரும், உதவி இயக்குனரும் மற்றும் கலாச்சாரத்துறையைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களும் இந்த சம்பவத்தில் பலியாகி உள்ளதாக மற்றொரு உள்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவர்கள் நால்வரும் குறைந்த சக்தி கொண்ட துப்பாக்கி கொண்டு சுடும் பயிற்சியிலும் அதனைத் தொடர்ந்து வேட்டையாடுதலிலும் ஈடுபட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ராணுவத்தினரால் சுடப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பலியானவர்களில் ஒருவர் ராணுவபாணி உடை அணிந்திருந்ததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட வீரர்கள் அங்கிருந்த அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பொதுமக்கள் மீது தவறுதலாக நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, துப்பாக்கி சூடு சம்பவத்தை ஆட்சேபித்த அவர்கள் ராணுவம் தங்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என கோரிக்கை எழுப்பினார்கள்.
பொதுமக்கள் ராணுவத்தினரை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இறங்குவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications