ரஷ்யா அதிபர் புதின் விமானத்தை இலக்கு வைத்து தாக்குதல்?
மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புதின் விமானத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தவறுதலாக மலேசிய பயணிகள் விமானம் சிக்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தது. 1990களில் சோவியத் ரஷ்யா சிதறுண்ட நிலையில் உக்ரைன் தனிநாடாகியது.
இருப்பினும் உக்ரைனின் பல சுயாட்சி பெற்ற மாகாணங்கள் ரஷ்யாவுடன் மீண்டும் இணைவதையே விரும்பி வருகின்றன. அண்மையில் கிரிமீயா என்ற மாகாணம் ரஷ்யாவுடன் இணைவதாக பிரகடனம் செய்து இணைந்தது.
கிழக்கு உக்ரைன் விவகாரம்
இதேபோல்தான் கிழக்கு உக்ரைனின் சில மாகாணங்களும் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இதற்கு உக்ரைன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனால் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் அரச படைகளுக்கும் இடையே மோதல்களும் வெடித்து வருகின்றன.
அமெரிக்கா ஆதரவு
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அத்துடன் உக்ரைன் அரச படைகளுக்கு ஆதரவாக ஆயுதமேந்திய குழுக்களும் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. இவர்களுக்கு அமெரிக்கா மறைமுக உதவிகள் செய்து வருகிறது. அதே போல உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஆதரவுடன் போராளிகள் உக்ரைனில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலேசிய விமானம் மீது தாக்குதல்
இந்த நிலையில்தான் 295 பயணிகளுடன் கோலாலம்பூர் வந்து கொண்டிருந்த மலேசிய விமானம் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டது. அதில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.
புதின் விமானம்
மலேசிய பயணிகள் விமானம் தாக்குதலுக்குள்ளான அதே நேரத்தில்தான் ரஷ்யா அதிபர் புதின் பயணித்த விமானமும் அதே வான்வெளியில் மாஸ்கோ நோக்கி வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துவிட்டு மாஸ்கோவுக்கு கிழக்கு உக்ரைன்வான் வழியாகவே புதின் பயணித்ததாக ரஷ்யா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
புதினுக்கு இலக்கு?
இதனால் உக்ரைன் அரச படைகள் அல்லது உக்ரைன் ஆதரவு ஆயுதக் குழுவினர், புதினின் விமானத்தை இலக்கு வைப்பதாக நினைத்து மலேசிய விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்றும் ரஷ்யா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன
தவறுதலாக சிக்கிய மலேசிய விமானம்?
இப்படி புதினின் விமானத்துக்கு இலக்கு வைக்கப்பட்டதில்தான் தவறுதலாக மலேசிய பயணிகள் விமானம் சிக்கியதாகவும் இதனாலேயே உக்ரைன் அரசு, ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களே அதை தாக்கியதாகவும் செய்திகளை பரப்புவதாகவும் கூறப்படுகிறது.
முழு விசாரணைக்கு கோரிக்கை
இருப்பினும் தாக்குதல் நடத்தியது யார்? எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது? யாரை இலக்கு வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது? என்பது பற்றி முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.