மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் 40 கப்பல்கள்... 22 விமானங்கள்: தீவிரவாதிகள் கடத்தினார்களா?
கோலாலம்பூர்: மாயமான போன மலேசிய பயணிகள் விமானத்தை கண்டறிவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. தீவிரவாதிகள் கடத்தியுள்ளனரா என்ற கோணத்தில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமையன்று பெய்ஜிங் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் வியட்நாமுக்குத் தெற்கே பறந்துகொண்டிருந்தபோது ராடார் தொடர்பை இழந்தது என்று கூறப்படுகிறது.
சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்த போயிங் ரக விமானத்தில் பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
40 கப்பல்கள் , 22 விமானங்கள்
மலேசிய விமானத்தை கண்டறியும் பணியில் வியட்நாம், மலேசியா, சீனா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனோசியா, தாய்லாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 கடற்படைக் கப்பல்களும், 22 போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காணாமல் போய் இரண்டுநாள் முடிந்த நிலையில், அதனைப் பற்றி எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை திடீரென இழந்ததால், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என சந்தேகம் எழுந்துள்ளது.
விமானம் விழுந்தது எங்கே
இதனிடையே மலேசியா விமானம் குறித்து மலேசிய விமானப்படைத் தலைமைத் தளபதி ரோட்சாலி தவூத் ஞாயிறன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், காணாமல் போன விமானத்தின் ரேடார் பதிவுகளை ஆய்வு செய்த போது, அந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு அதனை மீண்டும் கோலாலம்பூருக்கு திருப்ப விமானி முயற்சி செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக கூறினார். ஆனால் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு எந்த தகவலையும் அனுப்பவில்லை அதுதான் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார்.
தீவிரவாதிகள் கடத்தல்
இந்த நிலையில் விமானத்தை தீவிரவாதிகள் கடத்திவிட்டார்களா என்கிற கோணத்தில் மலேசிய அரசு விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தில் சென்ற இருவர், வேறு இருவரது பாஸ்போர்ட்டுகளைத் திருடி அதன் மூலம் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உளவுத்துறை விசாரணை
சந்தேகிக்கப்படும் பயணிகள் தொடர்பாக சர்வதேச உளவுத்துறை அமைப்புகளுக்கு தகவல் அளித்துள்ள மலேசியா அரசு, அனைத்து பயணிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.