விமான விவகாரம்: மலேசியா எதையோ மறைக்கிறதா?
கோலாலம்பூர்: மாயமாகி 2 வாரங்களுக்கு பிறகு தெற்கு இந்திய பெருங்கடலில் மூழ்கிவிட்டதாக கூறப்படும் விமானம் விவகாரத்தில் மலேசிய அரசு எதையோ மறைக்கிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய விமானம் மாயமானது. இரண்டு வாரங்களுக்கு மேலாக விமானத்தை 26 நாடுகள் தீவிரவமாக தேடி வந்தன. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்மார்சாட் என்ற நிறுவனம் செயற்கைக்கோள் அளித்த தகவல்களை கணக்கிட்டு விமானம் கடைசியாக இருந்த இடத்தை மலேசியாவிடம் தெரிவித்தது.
இதையடுத்து விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்று மலேசிய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.

மறைப்பு
விமான விவகாரத்தில் மலேசிய அரசு எதையோ மறைக்கிறது என்று கூறப்படுகிறது. விமானம் மாயமான மூன்றாவது நாளே இன்மார்சாட் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவல் கிடைத்த உடனேயே மலேசியா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

செல்போன்
விமானத்தில் ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை பயணிகள் உணர்ந்திருந்தால் அவர்களில் ஒருவராவது தங்களின் செல்போனை சுவிட்ச் ஆன் செய்து தகவல் கொடுத்திருப்பார்கள். ஆனால் மாயமான விமான பயணிகள் யாருமே செல்போனை பயன்படுத்தவில்லை. விமானிகளும் ஆபத்து கால சிக்னல் கொடுக்கவில்லை.

தற்கொலை
இதற்கிடையே விமானி தற்கொலை செய்யும் முயற்சியில் விமானத்தை கடலுக்குள் விட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. முன்னதாக விமானிகள் தற்கொலை செய்ய விமானத்தை விபத்துக்குள்ளாகிய சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகள்
மலேசிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி 9/11 தாக்குதல் போன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் விமானம் கடலுக்குள் விழுந்துள்ளதாலும், தீவிரவாத அமைப்பு எதுவும் பொறுப்பேற்காததாலும் இது தீவிரவாதிகளின் வேலையாக இருக்காது என்று கூறப்படுகிறது.

மலேசியா
இன்மார்சாட் நிறுவனம் தெரிவித்த தகவலை வைத்து இறுதி முடிவு எடுத்தது மலேசியா. ஆனால் அந்த நிறுவனம் தகவல் தெரிவித்து 10 நாட்களுக்கு மேல் விமானத்தை வெவ்வேறு இடங்களில் தேடி பயணிகளின் உறவினர்களுக்கு பல தகவல்கள் அளித்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

தேடல்
கடலுக்குள் விழுந்த விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த பணி எத்தனை நாட்கள் தொடரும் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications