இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு நேரடி விமான சேவை... மோடி அறிவிப்பு
மூன்று நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள மோடி, இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு நேரடியான விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
ஜெருசலம்: இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு புதிய விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 3 நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள அவர் இதனை தெரிவித்தார்.
பிரதமர் மோடி, 3 நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். 70 ஆண்டுகளில் இந்திய பிரதமர் யாரும் இஸ்ரேல் செல்லாத போது, இவர் முதன்முறையாக சென்றிருப்பதாது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுடன் 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இதில் விண்வெளி, விவசாயம், தொழிற்துறை மேம்பாடு, நீர்வள பாதுகாப்பு உட்பட ஏழு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

தீவிரவாத ஒழிப்பு
இரு நாட்டுத் தலைவர்களும் தீவிரவாத ஒழிப்பு, இருதரப்பு மேம்பாடு பற்றி பற்றி விரிவாக விவாதித்தனர். பிறகு, இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில், இஸ்ரேலை போலவே இந்தியாவும் தீவிரவாதத்தால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கூட்டறிக்கை
உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் தீவிரவாதம் பெரிய அச்சுறுத்தலை அளித்து வருகிறது. தீவிரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தீவிரவாத அமைப்புகள், தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் அதற்கு நிதியுதவி செய்பவர்கள், தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல்
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து நினைவு கூர்ந்தார். அது மிக மோசமானது என்றும் அவர் கூறினார். எனவே, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.

விமான சேவை
இந்தப் பயணத்தின் முத்தாய்ப்பாக டெல்லியில் இருந்து இஸ்ரேல் டெல் அவிவ்விற்கு நேரடியாக விமான சேவை தொடங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார். டெல்லி-மும்பை-டெல் அவிவ் விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications