இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி
ஹம்பர்க்: இஸ்ரேலில் 3 நாள் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி சென்றார். அங்கு அவருக்கு ஹம்பர்க் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 3-வது நாளான வியாழனன்று ஹைஃபாவில் முதல் உலகப்போரில் உயிர்நீத்த 44 இந்திய வீரர்களின் போர் நினைவிடத்துக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு-வுடன் கடற்கரையில் கால்நனைத்தபடி மோடி உரையாடினார்.

இந்நிலையில், தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடியை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார். இதைதொடர்ந்து பிரதமர் மோடி, ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள ஜெர்மனி நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். ஹம்பர்க் விமான நிலையத்தில் வந்தடைந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் உள்பட 19 நாட்டு தலைவர்களை சந்திக்க உள்ளார். அவர்களுடன் பயங்கரவாதம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன் உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
ஜி20 அமைப்புகளில் சீனாவும் உறுப்பு நாடாக இருப்பதால் இந்த மாநாட்டின் போது இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி சிக்கிம் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடும் என தகவல் வெளியானது. ஆனால் ஜி20 மாநாட்டுக்கு இடையே மோடி-ஜின்பிங் சந்தித்து பேசும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கோபால் பார்க்லே கூறுகையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை ஹம்பர்க் நகரில் தங்கியிருப்பார். இந்த மாநாட்டின் இடையே அர்ஜென்டினா, கனடா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, கொரியா, இங்கிலாந்து மற்றும் வியட்நாம் நாட்டு தலைவர்களை மோடி சந்தித்து பேச திட்டமிடப்பட்டு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications