மங்கோலியா நாட்டுக்கு செல்லும் முதலாவது இந்திய பிரதமர் மோடி! பிரமாண்ட வரவேற்பளிக்கப்படுகிறது!!
உலான் பாட்டர்: சீனாவில் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 17-ந் தேதியன்று மங்கோலியா நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்குச் செல்வது இதுவே முதல் முறை என்பதால் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட இருக்கிறது.
இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மூன்று நாட்கள் பயணமாக சீனா மேற்கொண்டுள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று இரவு சீனா புறப்பட்டுச் சென்றார் மோடி.

சீனா பயணத்தின் போது பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பிரதமர் மோடி வரும் 17-ந் தேதியன்று மங்கோலியா நாட்டுக்கு ஒருநாள் பயணமாக செல்கிறார்.
இந்தியாவுக்கும் மங்கோலியாவுக்கும் இடையே யோகா உள்ளிட்ட விஷயங்களில் ஒற்றுமை உண்டு. மங்கோலியா நாட்டுடன் தூதரக உறவுகளை மேற்கொண்ட முதலாவது நாடு இந்தியா.
இந்திய ஜனாதிபதிகளாக இருந்த எஸ். ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், பிரதீபா பாட்டீல் ஆகியோர் மங்கோலியா நாட்டுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தனர். அதேநேரத்தில் அந்நாட்டுக்குச் செல்கிற முதலாவது இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடிக்காக தலைநகர் உலான் பாட்டரில் உள்ள மங்கோலியா நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமையன்று திறக்கப்படுகிறது. அங்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
மங்கோலியாவில் ஏராளமான இயற்கை வளங்கள் உண்டு. குறிப்பாக தாதுபொருட்கள் மிகப் பெருமளவில் குவிந்து கிடக்கும் நாடு மங்கோலியா.
2009ஆம் ஆண்டு மங்கோலியாவிடம் இருந்து யுரேனியம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்தது.. இன்னமும் மங்கோலியாவிடம் இருந்து இந்தியா யுரேனியத்தைப் பெறவில்லை.
தற்போது பிரதமர் மோடியின் பயணத்தின் போது மங்கோலியாவுக்கு பெரிய அளவில் நிதி உதவியை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்தியாவை சுற்றிய அண்டை நாடுகளை சீனா வளைக்கும் அதே பாணியில் சீனாவை சுற்றிய அண்டை நாடுகளை வளைக்கும் யுக்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை இந்தியா மேற்கொள்கிறது.












Click it and Unblock the Notifications